சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் எனக் கூறி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சிவில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், 'அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது, அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'கட்சியின் உறுப்பினர்களாக இல்லாத மனுதாரர்களுக்கு, இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமையில்லை என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு தொடர அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார். இருவருக்கும் வழக்கு தொடர அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.