தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 10, 2021, 5:03 PM IST

Updated : Feb 10, 2021, 6:05 PM IST

ETV Bharat / city

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்! - அனைத்துக்கட்சிகள் வலியுறுத்தல்!

சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு அஞ்சல் வாக்குகளை அளிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

commission
commission

வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு, இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வந்தது. பின்னர், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுசில் சந்திரா, ராஜீவ் குமார், பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா, துணை தேர்தல் ஆணையர் சந்திர பூசன் குமார், கூடுதல் இயக்குநர் சேபாலி.பீ.சரன், இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சா, செயலாளர் மல்லே மாலிக் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு உள்ளிட்ட அதிகாரிகள், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதில், அதிமுக தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கிரிராஜன், காங்கிரஸ் சார்பில் தாமோதரன், நவாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன், ஆறுமுக நயினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீரபாண்டியன், பாஜக சார்பில் ஓம் பதல், கே.டி.ராகவன், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும், 80 வயதுக்கு மேற்பட்டோரை அஞ்சல் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது, பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் கட்சியினர் மீது நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகள், திமுக தரப்பில் வைக்கப்பட்டதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

80 வயது மூத்த குடிமக்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்கும் முறையை வரவேற்பதாக தெரிவித்த அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏப்ரல் மாதம் நான்காவது வாரத்தில் தேர்தலை நடத்த வலியுறுத்தியுள்ளதாகவும், தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்! - அனைத்துக்கட்சிகள் வலியுறுத்தல்!

மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளையும் இணையதளம் மூலம் கண்காணிக்க வேண்டும், வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், தேர்தலுக்கு முன்பாக அதிக செலவு செய்வதற்கு அரசுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும், தேர்தல் நேர வழக்குகளில் பதிவோடு நிறுத்தாமல், தண்டனை பெற்றுத்தர வேண்டும், வாக்குப்பதிவு, எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும், செயல்படுத்தக்கூடியவற்றை மட்டுமே கட்சிகள் அறிக்கையாக வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை இன்றைய ஆலோசனையில் பங்கேற்ற கட்சிகள் தேர்தல் ஆணையக் குழுவிடம் வலியுறுத்தின.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ள தேர்தல் ஆணையக் குழுவினர், தேர்தல் தேதி அறிவிப்பு குறித்த முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருப்பூரில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு

Last Updated : Feb 10, 2021, 6:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details