தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் விதிமுறைகளை வெளியிட்ட சென்னை மாநகராட்சி - election guidelines 2022

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பொது நடத்தை விதிமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

election guidelines 2022
சென்னை மாநகராட்சி

By

Published : Jan 27, 2022, 10:24 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேர்தல் நடத்தை விதிகளின்படி எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் வெவ்வேறு சாதிகள், சமூகத்தினர், மதத்தினர் அல்லது பல்வேறு மொழி பேசும் இனத்தினரிடையே நிலவும் வேறுபாடுகளை அதிகப்படுத்தும் வகையிலோ அல்லது வெறுப்புணர்வை உருவாக்கும் வகையிலோ செயல்படக் கூடாது.

வாக்குகளை பெறுவதற்காக சாதி அல்லது சமூக உணர்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வேண்டுகோளையும் விடுக்கக் கூடாது. கோயில், மசூதி மற்றும் தேவாலயங்கள் உள்பட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் குறித்த பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது.

தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும்

பிற அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்யும்போது அவர்களுடைய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும், அவர்களின் கடந்த கால பணி மற்றும் செயல்பாடு குறித்து இருக்க வேண்டும். கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ அரசியல் கட்சி தலைவர்கள் அல்லது கட்சி தொண்டர்களின் பொது வாழ்க்கை செயல்பாடுகளுக்கு தொடர்பில்லாத தனிப்பட்ட வாழ்க்கையின் தன்மைகள் குறித்து விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்.

எந்த சந்தர்ப்பத்திலும் தனி நபரது கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளை எதிர்க்கும் விதமாக அவர்களது வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டங்கள் அல்லது மறியல் நடத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது.

வாக்காளர்களுக்கு எவ்வகையிலும் லஞ்சமோ அல்லது வெகுமதியோ கொடுக்கக் கூடாது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாக்காளர் அல்லது அவரது ஆதரவாளர்களை அச்சுறுத்தல் அல்லது தேவையற்ற செல்வாக்கை அவரிடம் பயன்படுத்துதல், அவருடைய வாக்குரிமையில் தலையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

மதுபானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் வழங்கப்படும் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் நடத்துதல் கூடாது.

பிரச்சாரங்களில் கட்டுப்பாடுகள்

விளம்பரங்கள் பொறுத்த வரை, அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடாமல் தேர்தல் சம்பந்தப்பட்ட துண்டு பிரசுரம், நோட்டீஸ் எதையும் அரசியல் கட்சிகள் அச்சடிக்கக்கூடாது.

பொதுக் கட்டடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் தேர்தல் குறித்த சுவரொட்டி ஒட்டுவது மற்றும் விளம்பரங்கள் எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

பிரச்சாரங்கள் மற்றும் ஒலிபெருக்கி பொறுத்த வரை, ஒலிபெருக்கிகள் பயன்படுத்த காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். எந்தக் கட்சியோ அல்லது வேட்பாளரோ தகுதியுள்ள அலுவலரிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது.

பாதுகாப்பு வழிமுறைகள்

கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள காரணத்தினால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரு வேட்பாளர் தன்னுடன் அதிகபட்சமாக மூன்று ஆதரவாளர்களுடன் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியுடன் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.

செலவின உச்ச வரம்பு பொறுத்த வரையில் பெருநகர சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.90 ஆயிரம் வரை மட்டுமே செலவு செய்ய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தல்களை நடத்த 37 உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பறக்கும் படை

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் பணம் ரொக்கமாக மற்றும் பொருள்களை தகுந்த ஆவணங்களின்றி கொண்டு செல்வதை கண்காணிக்கவும், அவற்றை பறிமுதல் செய்யவும் ஒரு மண்டலத்திற்கு மூன்று என சுழற்சி முறையில் 24 மணி நேரம் இயங்கும் வகையில் 45 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவில் உதவி செயற்பொறியாளர், இரண்டு காவலர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் உள்பட நான்கு நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தனிநபர் ரொக்கமாக ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் அல்லது வாக்காளர்களை கவரும் வகையில், அவர்களுக்கு வழங்க ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் உள்பட ஏனைய பொருள்களை கொண்டு சென்றால் பறக்கும் படைக் குழுவினரால் பறிமுதல் செய்யப்படும்.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரிய 20 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், மாநகராட்சியின் இணையதள இணைப்பிலும் தெரிவிக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஞாயிறு முழு ஊரடங்கு நீக்கம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details