தமிழ்நாடு

tamil nadu

’ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’- நீக்கப்பட்ட டப்பிங் கலைஞர்கள்!

By

Published : Jan 28, 2022, 7:38 PM IST

Updated : Jan 28, 2022, 8:24 PM IST

டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

allegation against radharavi
டப்பிங் கலைஞர்கள்

சென்னை: டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மயிலை குமார், முரளிகுமார், தாசரதி, மதியழகன் உள்ளிட்டோர் இன்று (ஜன.28) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசுகையில், “1983ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட இச்சங்கத்தில் இதுவரை 1,580 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 1985ஆம் ஆண்டில் தலைவராக இருந்த ராதாரவி தற்போது வரை தலைவராக உள்ளார். இடையில் ஒரு சிலர் தலைவராக இருந்துள்ளனர். இவரது நிர்வாகத்தின் கீழ் இதுவரை ரூ.10 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது.

டப்பிங் கலைஞர்கள்

இதனை எதிர்த்து கடந்த 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொழிலாளர் நலத்துறையிடம் விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது விசாரணை முடிவில் ராதாரவி தலைமையில் டப்பிங் யூனியனில் ஊழல் நடைபெற்றிருப்பது உண்மை என தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் உறுதி செய்தார்.

இந்நிலையில், சங்கத்தின் கணக்கு தொடர்பாக கேள்வியெழுப்பிய உறுப்பினர்கள் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், உறுப்பினர்களின் சம்பளத்தை வசூலிப்பதற்கு ஒரு சில ஆள்களை கமிஷன் அடிப்படையில் ராதாரவி நியமித்துள்ளார்.

அவர்கள் வசூலித்து கொடுக்கும் சம்பளப்பணத்தில் 5 சதவீத பணத்தை பரிசாக அவர்களுக்கு கொடுத்து விடுவார். இதற்காகவே 19 பேரை ராதாரவி நியமித்துள்ளார். இதே நிலைதான் சின்னத்திரை டப்பிங் கலைஞர்களுக்கும். இதே போன்று சங்கத்தின் அனைத்து வகையிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.

வரும் பிப்ரவரி மாதத்துடன் அவரது பதவிக் காலம் முடிவடைகிறது. எனவே, அடுத்து தேர்தல் வரவுள்ளது. இதனை காரணம் காட்டி தொழிலாளர் நலத்துறை கேட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பதில் காலதாமதம் செய்ய வாய்ப்புள்ளது. கரோனா காலத்தில் நடிகர்கள் வழங்கிய நிவாரண நிதி கூட பாதி உறுப்பினர்களுக்கு கிடைக்கவே இல்லை. அதுவும் அவரது ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதில் பயனடைந்த பாதிப்பேர் டப்பிங் கலைஞர்களே கிடையாது.

ராதாரவி பாஜக கட்சியில் இருப்பதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் எங்களுக்கு மிரட்டல் வருகிறது. ஆகவே, தேர்தல் நடத்தக்கூடாது. பலகோடி ரூபாய் வரை முறைகேடு நடத்திய இந்த நிர்வாகம் தேர்தல் நடத்தக்கூடாது. மேலும், முறைகேடுகள் நடக்காமல் இருக்க தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

இதற்கு பலன் கிடைக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். ராதாரவி தலைமையிலான நிர்வாகத்தில் கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். கையாடல் செய்யப்பட்ட பணத்தை மீட்கவும் போராடுவோம்” என்றனர்.

இதையும் படிங்க: நடுநிலையோடு வேட்பு மனு பரிசீலனை நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும்

Last Updated : Jan 28, 2022, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details