தமிழ்நாடு

tamil nadu

'தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும்' - வானிலை ஆய்வு மையம்

By

Published : Mar 29, 2021, 4:27 PM IST

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai-meteorological-department
chennai-meteorological-department

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அந்தமான் கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல சுழற்சியானது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், அதைத்தொடர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும் உருவாக வாய்ப்புள்ளது. அதனால், தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அத்துடன் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வறண்ட வானிலை

குறிப்பாக நாளை(மார்ச்.30) முதல் ஏப்.2ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையிலிருந்து தமிழ்நாடு நோக்கி வீச சாத்தியக்கூறுகள் உள்ளன. அதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலையானது இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

29.03.2021: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
30.03.2021: தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
31.03.2021:மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியானது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, 29.03.2021 & 30.03.2021தேதிகளில் தெற்கு அரபிக் கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details