இந்த நவயுக காலத்திலேயே மக்கள் படிப்பதற்கு பாடுபடவேண்டிய நிலையில் பெண்ணடிமைத்தனம் ஊறிய காலத்தில் பள்ளி, கல்லூரி மட்டுமல்லாமல், பணியிலும் தனியொரு பெண்ணாக நின்று சாதனை புரிந்தவர். இன்று கல்வி கற்க பல்வேறு இடையூறு இருக்கும் சூழலில் அன்று முத்துலட்சுமிக்கு அவரது பாலினம் இடையூறாக அமைந்தது. அக்காலகட்டத்தில் தற்போதுள்ள அரசியல் தலைவர்கள் போல் அப்போதைய அரசியல் தலைவர்கள் இல்லாத காரணத்தினால் அவரால் முன்னேற முடிந்தது.
அன்றிலிருந்து இன்றுவரை சாதிய அடிப்படையிலான, பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் வார்த்தையளவில், அரசியல் கட்சிகளின் கொள்கையளவில் மாற்றமடைந்திருந்தாலும் சமூகத்தில் மாற்றமடையாமல்தான் உள்ளன. அதை உறுதிபடுத்தும் வகையில் பல அரசியல் நிகழ்வுகள் நடைபெற்றன, நடைபெறுகின்றன.
இன்று இந்திய மாணவர்களின் கல்வி தரத்தை உலகளவு கொண்டு செல்வதற்கான முயற்சியாக மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே கல்வி வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டவர் முத்துலட்சுமி. ஆனால் இன்று கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் சாதிய பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன. அவற்றை தடுக்க எந்த அரசியல் அமைப்பும் முன்வரவில்லை.
மருத்துவத் துறையில் பல சாதனைகள் புரிந்தமைக்காக அவரது பிறந்தநாள் மருத்துவ தினமாக அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது அவருக்கு தமிழ்நாடு அரசு அளிக்கும் கவுரவமாக நினைக்கிறது. இது பெருமைக்குரிய ஒன்றுதான். ஆகினும், ஒருவருக்கான அங்கீகாரமானது அவரது கொள்கைகளையும், லட்சியங்களையும் தன்னுடையதாக கொண்டு செயல்படுவதில் அடங்குகிறது. அப்படி இருக்கையில் தமிழ்நாடு அரசோ சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு மருத்துவ வசதிகளில் பின்னோக்கியே சென்றுள்ளது. இச்சமயத்தில் அவருக்கு அளித்த கவுரவங்கள் அனைத்தும் நீர்த்துப் போகின்றன.