தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 2, 2022, 7:43 AM IST

ETV Bharat / city

இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை' - டாக்டர் ரவீந்திரநாத்

உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்தது வேதனை அளிப்பதாகவும் போர் தொடங்குவதற்கு முன்பே இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்காததே இந்திய மாணவர்கள் படும் துயரத்திற்கு காரணம் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

doctor association condolences on student naveen death at Ukraine
சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்

சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, ”கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மருத்துவ மாணவர் நவீன் உக்ரைனில் குண்டு வீச்சுக்கு ஆளாகி இறந்துள்ளார். இது மிகவும் வேதனை அளிக்கும் செய்தியாகும்.

மாணவர் நவீனுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கனத்த இதயத்தோடு அஞ்சலியை செலுத்துகிறது. அவரை பிரிந்து வாடும் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததும், உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் உரிய உதவிகளையும் போதுமான வழிகாட்டுதல்களையும் செய்யாததும் அதன் அலட்சியப் போக்குமே மருத்துவ மாணவர் நவீன் மரணத்திற்கு காரணம்.

இனியும் கால தாமதம் செய்யாமல் மத்திய அரசு இந்திய மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும். இந்திய மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினர் பாதுகாப்பாக உக்ரைனிலிருந்து வெளியேற உக்ரைன் மற்றும் ரஷ்ய அரசு உதவ வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். அதற்குத் தேவையான தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும்.

அதுமட்டுமன்றி, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர போருக்கு காரணமான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திட தொடர்புடைய நாடுகளை வலியுறுத்த வேண்டும். இத்தகைய நிலைமை ஏற்படாமல் தடுக்க உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை நிலைநாட்ட உதவும் கருவியாக உள்ள நேட்டோ ராணுவக் கூட்டணியை கலைக்க வேண்டும். நாடுகளிடையே எழும் பிரச்சனைகளை அரசியல் ரீதியாக அமைதி வழியில் பேசி தீர்த்துக் கொள்ளும் முறையை வலுப்படுத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையை நடுநிலையானதாகவும் ஜனநாயகம் மிக்கதாகவும் மாற்றிட வேண்டும். இதற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள், உலக சமாதான சக்திகள், அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்கள் வலிமையாக குரல் கொடுக்க வேண்டும்”எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உக்ரைனில் இந்தியர் பலி: மாணவரின் தந்தைக்கு ஆறுதல் கூறிய பிரதமர்

ABOUT THE AUTHOR

...view details