தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 18, 2020, 12:04 PM IST

ETV Bharat / city

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும்! - ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்!

சென்னை: மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத மனப்போக்கை கைவிட்டு 10ஆம் பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

stalin
stalin

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை தொடர்கிற நிலையில், ஐந்தாம் கட்ட ஊரடங்கு குறித்து உறுதியாக எதையும் சொல்ல முடியாத சூழலில், ஜூன் 1ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் என அறிவிக்கும் அரசின் பிடிவாதமான நிலைப்பாடு, மாணவர்கள் மீதான அக்கறையற்ற தன்மையையே காட்டுகிறது.

கரோனாவால் 11 ஆயிரம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மகாராஷ்ட்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது மாநிலம் தமிழ்நாடு என்ற மோசமான இடத்துக்கு வந்துவிட்டது. இதில், பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாது என்ற அடிப்படையிலேயே தேர்வுகளை நடத்துவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பதில் அலட்சியமும், அகங்காரமுமே தெரிகிறது.

மாணவர்கள், பெற்றோரின் மனநிலையை பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஜூன் 1ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்றும், ஆசிரியர்களுக்கு பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழிச்சாட்டியமாக அறிவித்துக் கொண்டே இருக்கிறார். கல்வியாளர்கள் பலரும், ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு, நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வழக்கமான முறையில் வகுப்புகள் நடைபெற்று, அதற்குப் பின் பொதுத்தேர்வு நடத்துவதே மாணவர்களின் மன, உடல்நலனுக்கு உகந்தது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே, மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத மனப்போக்கை கைவிட்டு, பொதுத்தேர்வை தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வை நடத்துமாறு மீண்டும் வலியுறுத்துகிறேன் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க ஆசிரியர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details