தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 15, 2020, 7:47 PM IST

ETV Bharat / city

நீட் தேர்வு மரணத்திற்கு திமுக தான் காரணம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஆவேசம்!

சென்னை: நீட் தேர்வால் உயிரிழந்த 13 பேர் மரணத்திற்கு காரணம் திமுக தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசினார்.

சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுறை பேசினார். அப்போது ப. சிதம்பரத்தின் மனைவி நளினி உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்விற்கு ஆதரவாக வாதாடினார் என்று தெரிவித்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, அமைதியாக இருக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.

இது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரவில்லை என்றும் நீட் தேர்வு குறித்து தவறான தகவல் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தவறான தகவல் கிடையாது , உண்மையான தகவல். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததா, இல்லையா, மறுக்க முடியுமா ? எதிர்க்கட்சித் துணைத் தலைவரே பதில் சொல்லுங்கள், யாருடைய ஆட்சியில் நீட் வந்தது? நீட் தேர்வு எப்பொழுது வந்தது? நீட் தேர்வை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்று இந்த நாட்டிற்கே தெரியும், யாருக்கும் தெரியாமல் இல்லை.

2010ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வாதாடி தீர்ப்பைப் பெற்றது அதிமுக. அதை மறுக்க முடியுமா? அப்பொழுது அந்த தீர்ப்பை எதிர்த்து யார் வாதாடினார்கள்? இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறீர்களே, இத்தனை பேர் வாதாடுவதற்கு காரணம் என்ன? காரண கர்த்தா யார்? இவ்வளவு பேருக்கு பிரச்னை வந்ததற்கு யார் காரணம்? நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை மீண்டும் கொண்டு வருவதற்கு யார் காரணம் ? நாங்கள் அல்ல. நீங்கள் (திமுக) கூட்டணியில் வைத்திருக்கிறீர்களே, இப்பொழுது வெளிநடப்பு செய்தார்களே, அவர்கள் (காங்கிரஸ்) நீதிமன்றத்தில் வாதாடி, வெளியில் வந்து முற்றுப்புள்ளி வைத்தேன் என்று சொன்னார்கள்.

நீங்கள் கூட்டணியில் இடம்பெற்று 2010ஆம் ஆண்டில் நீட் தேர்வை கொண்டு வந்தது தான் 13 பேர் மரணத்திற்குக் காரணம். திமுக துணை போனது, யாரும் மறுக்க முடியாது. வரலாற்றுப் பிழையை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என ஆவேசமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு!

ABOUT THE AUTHOR

...view details