தொழிற்சாலைகள் நிறைந்த மணலி பகுதிக்கு செல்ல, முக்கிய இணைப்பு சாலையாக இருக்கும் திருவொற்றியூர்-மணலி சாலையில் உள்ள மேம்பாலம் வலுவிழந்திருந்ததால், அதனை அகற்றி புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. 42 கோடி ரூபாய் செலவில், இரண்டு கி.மீ தூரத்திற்கு மேம்பாலங்களை கட்டி, 2018 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிப்பதாக திட்டமிடப்பட்டது.
ஆனால், ஆறு ஆண்டு காலமாகியும் இதுவரை அப்பணிகள் முடிக்கப்படாமல், மந்த நிலையில் உள்ளது. இதனால், பொதுமக்கள் மணலியிலிருந்து மாதவரத்திற்கு, 5 கி.மீ தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மேம்பாலப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, 100 பேர் வேலை செய்யும் இடத்தில் 35 பேரை மட்டுமே வைத்து பணி நடைபெறுவதாகவும், இப்பணி நிறைவடைய இன்னும் ஓராண்டு காலமாகும் எனவும் அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.