தமிழ்நாடு

tamil nadu

ஆர்எஸ்எஸ் பேரணி... அக்.2ஆம் தேதி வேண்டாம்...  நவ.6ஆம் தேதி நடத்துங்கள்... உயர் நீதிமன்றம்...

By

Published : Sep 30, 2022, 6:05 PM IST

தமிழ்நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharatதமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்  பேரணியை மாற்று நாளில்  நடத்த அனுமதி
Etv Bharatதமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணியை மாற்று நாளில் நடத்த அனுமதி

சென்னை: தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணியை நவம்பர் 6ஆம் தேதி நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு காவல்துறை அந்த பேரணிக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைதிப் பேரணி நடத்த தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்தது. தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று(செப்-30) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆர்எஸ்எஸ் தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, "ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி நிபந்தனைகளை வகுத்து நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். நீதித்துறையை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டதால் நடைபெறும் போராட்டங்களை காரணம் காட்டி, எங்களது ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கமுடியாது.

கடந்த 2013ஆம் ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாளன்று பேரணி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல்துறையில் மூன்று நாட்களுக்கு முன் மனு கொடுத்துவிட்டு, உடனடியாக நீதிமன்றத்தை நாடியபோது, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஊர்வலத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டும், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

யாருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்ப மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்த பிறகும் காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பதன் அர்த்தம் புரியவில்லை. ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை கூறிவருகிறது என வாதிட்டார்.

அதன்பின் மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன் ஆஜராகி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது தான் காவல்துறையின் கடமை என்று பல முறை அறிவுறுத்தி உள்ளதாகவும், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தடையை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெறும் கேரளாவிலும், புதுச்சேரியிலும் அனுமதி வழங்கபட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது என வாதிட்டார்.

அதன்பின் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, தேசிய புலனாய்வு முகமையின் சோதனை, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவல்துறை இந்த முடிவெடுத்துள்ளது. குறிப்பாக சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது சொத்துகளை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டது.

மத்திய உளவுத்துறையின் அறிக்கைகளை புறந்தள்ளிவிட முடியாது. பொது மக்களின் நலன் தான் உச்சபட்ச முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்ற கருத்தில் காவல்துறை செயல்படுவதாக என வாதிட்டார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, காந்தி ஜெயந்தி அன்று ஊரவலம் செல்ல மட்டும்தான் அனுமதி மறுக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பிய போது, அதற்கு விளக்கம் அளித்த காவல்துறை, தற்போதைய சூழலில் அன்றைய தினத்திற்கு பதிலாக மாற்றுத் தேதியில் அனுமதி கோரினால் பரிசீலித்தி முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா தடைக்கு பிறகு சென்னை வடக்கு மண்டலத்தில் மட்டும் பாஜகவினற்கு சொந்தமான 402 வீடுகள், 65 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகின்றன. என்.ஐ.ஏ. சோதனை, பெட்ரோல் குணு வீச்சு ஆகியவற்றிற்கு பிறகு 52,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதி தற்போதைய செய்திகள், காவல்துறை விளக்கம், மனுதாரர்களுக்கு சொந்தமான இடங்களில் அச்சுறுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்று தேதியில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு அறிவுறுத்தினார். அதன்பின்னர் நவம்பர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்தும் படி ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு உத்தரவிட்டதுடன், அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:காந்தி பிறந்த நாளில் சமூக நல்லிணக்க பேரணி - திருமாவளவன் எம்பி

ABOUT THE AUTHOR

...view details