தமிழ்நாடு

tamil nadu

Omicron: ஒமைக்ரான் தொற்று பாதித்த மூன்று பேர் டிஸ்சார்ஜ் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

By

Published : Dec 23, 2021, 9:44 PM IST

Omicron: தமிழ்நாட்டில் ஒமைக்ரானால் 34 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 31ஆக குறைந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை:Omicron:ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

பின்னர், தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபரான நைஜீரியாவில் இருந்து வந்தவரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் இன்று (டிச.23) குணமடைந்து வீடு திரும்பினர்.

அவர்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பழக்கூடை வழங்கி நலம் விசாரித்தார்.

குணமடைந்து வீடு திரும்பிய நோயாளிகள்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தமிழ்நாட்டில் முதல் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான நைஜீரியாவில் இருந்து வந்தவர், அவர் சகோதரி, சகோதரி மகள் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று (டிச.23) குணமடைந்து வீடு திரும்பினர்.

மூன்று பேர் குணமடைந்ததில் மகிழ்ச்சி, அவர்களை நலம் விசாரித்தேன். லேசானப் பாதிப்பு இருப்பதாகக் கூறினர். இவர்கள் ஏழு நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர் குடும்பத்தைச் சேர்ந்த மீதமுள்ள ஐந்து நபர்கள் நாளை (டிச.23) குணமடைந்து வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒமைக்ரானால் 34 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 31ஆக குறைந்தது. ஒன்றிய சுகாதாரத்துறை சார்பாக நாடுமுழுவதுமுள்ள மாநில சுகாதாரத்துறை அலுவலர்களுடன் இன்று (டிச.23) ஒமைக்ரான் பரவல் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (டிச.24) ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

விழா கொண்டாட்டங்களில் தனிமனிதக் கட்டுப்பாடு அவசியம்

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் பகுதிகளில் தடுப்பூசி போடுவது குறைவாக இருப்பதால் தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.

தமிழ்நாட்டில் 93 லட்சம் பேர் இரண்டாம் தடுவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. வரும் வாரமும் அடுத்த வாரமும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

தடுப்பூசிப் போடும் பணியில் ஈடுபட்ட கிறிஸ்தவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து விழா கொண்டாட்டங்களிலும் தனிமனிதக் கட்டுப்பாடு அவசியம். ஒமைக்ரான் உடல் ரிதீயான பாதிப்பு குறைவாக இருந்தாலும் நோய்ப் பரவல் அதிகமாக உள்ளது.

எந்த விழா கொண்டாட்டமாக இருந்தாலும் சுய கட்டுப்பாட்டை மக்கள் விதித்துக்கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்

நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், 'பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து வலியுறுத்தியுள்ளோம். 18 வயதிற்கு குறைவானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் தயார் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

10 விழுக்காட்டுக்கு மேல் தொற்று ஏற்பட்டப் பகுதிகளில், நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்; மருத்துவக் கட்டமைப்புகளை உயர்த்தி, கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தவும் ஒன்றிய அரசு கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் முன்கூட்டியே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டின் மங்கலகரத்துக்கே மஞ்சப்பை - அமைச்சர் எ.வ. வேலு

ABOUT THE AUTHOR

...view details