தமிழ்நாடு

tamil nadu

Covid 19 case increases in chennai: சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று

By

Published : Dec 29, 2021, 3:19 PM IST

Covid 19 case increases in Chennai: சென்னையில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பல பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

corona cases in increase in chennai
ஒமைக்ரான் தொற்று

சென்னை:Covid 19 case increases in Chennai:அசோக் நகர் காலனியில், ஒரே தெருவைச் சேர்ந்த 10 நபர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அப்பகுதியில் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மஹாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று ஓரிரு நாள்களாக அதிகரித்து வருகிறது. சென்னையிலும் தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

ஒரே தெருவைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா

அசோக் நகர் காலனியில் ஒரே தெருவில் 10க்கும் மேற்பட்டவருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த தெருவைச் சேர்ந்த ஒருவர், ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒருவரை சந்தித்து வந்துள்ளார். அவருக்குப் பின் அடுத்தடுத்த தொற்று ஏற்பட்டுள்ளதால், இது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு உள்ளது.

மேலும், சென்னையில் நேற்று 194 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று 200-க்கும் அதிகமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை 17ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் 50ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்

புதிய கரோனா சிகிச்சை மையங்கள்

ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, சென்னையில் மூன்று இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தண்டையார்பேட்டை, நந்தம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம் மீண்டும் கரோனா பாதுகாப்பு மையமாக மாற்றப்படும்.

இந்தச் சூழ்நிலையில், சென்னை மக்களுக்கு ஒரு வேண்டுகோள்; கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்துவதைப் பொறுத்தவரை முதல் தவணை 86 விழுக்காடும், இரண்டாம் தவணை 58 விழுக்காடும் செலுத்தி உள்ளனர்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்ட கரோனா

மேலும் 95 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்குத் தகுதி உள்ளவர்களாக உள்ளனர். எனவே, அவர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 129 பேருக்கு எஸ்.ஜீன் டிராப் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதேபோல், ஒமைக்ரான் தொற்றுப் பாதித்தவர்கள் அனைவருமே ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், அவர்கள் யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்கிற நிலை ஏற்படவில்லை.

மாணவர்களுக்குத் தடுப்பூசிப் போடும் பணி

மாவட்ட வாரியாக பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களைக் கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் 3ஆம் தேதி, 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை போரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் உள்பட வெளிநாடுகளிலிருந்து வந்த பலருக்கு S வகை மரபணு மாற்றம் கண்டறியப்பட்டாலும் பெரிய அளவில் அறிகுறிகள் இல்லாத சூழல் நீடிக்கிறது” எனத் தெரிவித்தார்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “சென்னையில் 39,537 தெருக்கள் உள்ள நிலையில் 507 தெருக்களில் கரோனா தொற்றாளர்கள் உள்ளனர். இதில் 429 தெருக்களில் மூன்றுக்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 78 தெருக்களில் மூன்று பேருக்கும், 42 தெருக்களில் நான்கு பேருக்கும், 18 தெருக்களில் ஐந்து பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆறு முதல் பத்து பேர் வரை பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள நான்கு தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிகளாக உள்ளன. 10 முதல் 25 பேர் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள ஒரு தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது' எனக் கூறினார்.

இதையும் படிங்க: நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது - ஆளுநர் மாளிகை தகவல்

ABOUT THE AUTHOR

...view details