தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் குறிப்பிட்ட கடைகள் மட்டும் இயங்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. தடையை மீறி இயங்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவித்தது.
இந்நிலையில் திருவொற்றியூர் மாணிக்கம் நகா் மெயின் ரோட்டில் உள்ள முடித் திருத்தும் கடை ஒன்று சட்டவிரோதமாக திறந்திருந்தது. இத்தத் தகவலையறிந்த மாநகராட்சி அலுவலர்கள் விரைந்து அங்குச் சென்று அந்தக் கடைக்கு சீல் வைத்தனர்.
இது தொடர்பாக திருவொற்றியூர் மண்டல அலுவலரிடம் பேசியதுபோது "எங்களுக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக சென்று சீல் வைத்துவிட்டோம். அடுத்த அறிவிப்பு மாநகராட்சியிலிருந்து வரும் வரை கடை சீலில் தான் இருக்கும். அந்த கடையில் யாரும் முடித் திருத்தம் செய்யாததால் யாரையும் கரோனா பரிசோதனை செய்யவில்லை" என தெரிவித்தார்.