தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா மரணங்கள் எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் - corona deaths

மரணங்கள் எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும்
மரணங்கள் எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும்

By

Published : May 17, 2021, 4:43 PM IST

Updated : May 17, 2021, 7:18 PM IST

16:39 May 17

கரோனா காரணமாக ஏற்படும் மரணங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, ஆக்சிஜன் சப்ளை, ரெம்டெசிவிர் மருந்தை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பது குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது.

தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், ஊரடங்கு அமலில் உள்ள போது வாகனங்களில் சாலைகளில் ஏராளமானோர் சுற்றித் திரிவதாகவும் தெரிவித்தனர்.  குழந்தைகள் விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும், சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

மாநிலம் முழுவதும் உள்ள இ எஸ் ஐ மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஒரு மாதத்தில் தடுப்பூசி உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கப்படும் என கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற வளாகங்களை கரோனா சிகிச்சை மையங்களாகவோ? தடுப்பூசி மையங்களாகவோ? பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்தனர்.

பரிசோதனைகளை குறைக்க கூடாது எனவும், கரோனா மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், அப்போது தான் எதிர்காலத்தில் ஆக்சிஜன், மருந்து பெற உதவியாக இருக்கும் என சுட்டிக்காட்டினர்.

கரோனாவுக்கு பலியானவர்களின் உடல்களை மருத்துவமனைகளிலேயே வைத்திருப்பது மற்ற நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை உரிய விதிகளை பின்பற்றி அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். 

தடுப்பூசி சப்ளை போதுமான அளவில் இல்லாததால் தடுப்பூசி முகாம்கள் துவங்குவது ஸ்தம்பித்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள்,  உள்நாட்டு மருந்துகளான எக்சாமெதோசோன் உள்ளிட்ட மருந்துகளை பயன்படுத்தலாம் என்ற மத்திய அரசின் அறிக்கையை மேற்கோள்காட்டியுள்ளனர்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளை பொறுத்தவரை, இ.எஸ்.ஐ உறுப்பினர்களின் நிதியில் அவை செயல்படுவதால் , அங்கு கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க உத்தரவிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இ.எஸ்.ஐ. கிளினிக்களை தடுப்பூசி மையங்களாக பயன்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர்.

ஊரடங்கு நல்ல முடிவுகளை தந்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அதை கடுமையாக்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், கரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக திட்டங்கள் வகுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். விசாரணையை மே 20ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்

Last Updated : May 17, 2021, 7:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details