சென்னை விமான நிலையத்தில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது, “ கரோனா காலத்தில் தொழில் இல்லாமல் இருந்த மக்கள் பலர், தற்போது நிவர் புயலாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அது பற்றிய கணக்கு எடுத்து, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
வேல் யாத்திரை என்ற, பழக்கத்தில் இல்லாத ஒன்றை பாஜக கையில் எடுத்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக தமிழ் கடவுளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்காக ஏர் கலப்பை பேரணியை நடத்தியுள்ளது.
தமிழகத்திற்கு செய்தவை என்ன? அமித்ஷாவுடன் விவாதிக்க தயார்! மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது என்பதை பட்டியலிட்டு, அமித்ஷா தமிழில் பேசட்டும். திட்டங்கள் குறித்து பேச அமித்ஷா வந்தால், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவரை நியமித்து விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையை நொண்டி சாக்கை வைத்து அதிமுக அரசு தடுக்கிறது. அவரது களப்பணியைக் கண்டு அஞ்சுகிறார்கள் “ என்று கூறினார்.
இதையும் படிங்க:சினிமா பாணியில் திருடனை துரத்திப் பிடித்த சென்னை காவலர் - நெட்டிசன்கள் பாராட்டு