சென்னை: சிட்லபாக்கத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏரி ஆக்கிரமிப்பில் உள்ள 450 வீடுகளை அகற்றுவதற்காக வருவாய்த் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஏரியின் மேற்குப் பகுதியில் உள்ள பெரியார் தெருவில் பட்டா நிலங்களை ஆக்கிரமிப்பு எனக் கூறி அகற்ற முயலுவதாகப் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதிகளை அளவீடு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி தலைமையில் வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறையினர், காவல் துறையினர் இணைந்து அளவீடு செய்யும் பணியை இன்று காலை தொடங்கினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நூற்றுக்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பட்டா நிலங்களை அளக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தங்களிடமுள்ள பத்திரங்களை, பட்டா விபரங்களைக் கேட்ட பிறகு அளக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.