இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பள்ளி மாணவர்கள் கம்ப்யூட்டர் விளையாட்டின் மூலம் கோடிங் எழுதுவதற்கு குவி (Guvi) என்ற நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது. இதற்கான பயிற்சி HackerKID என்ற இணையதளத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. குவி நிறுவனம், ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் கம்ப்யூட்டர் கோடிங் எழுதுவதற்கு 1000 பொறியியல் கல்லூரிகளில் பயிற்சி அளித்துள்ளது. இதன் மூலம் 4 லட்சத்து 60 ஆயிரம் பொறியியல் மாணவர்கள் பைத்தான், ஜாவா, மெக்கானிக் லெர்னிங் உள்ளிட்ட திறன்களை பெற்று வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குவி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பாலமுருகன் கூறுகையில், "இளம் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கோடிங் எழுதுவதற்கான பயிற்சி அளிப்பதற்கு இந்த விளையாட்டை தொடக்கி உள்ளோம். விளையாட்டு மூலம் மாணவர்கள் ஆர்வமாக தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள முடியும். இந்த முறையானது பெற்றோரின் செல்போன் மூலம் உருவாக்கப்படுவதால் மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். மாணவர்கள் விளையாட்டு முறையிலேயே கம்ப்யூட்டர் கோடிங் எழுதி தங்களின் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
ஒன்பது முதல் 14 வயது வரையில் உள்ள மாணவர்கள் http://www.hackerkid.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து தங்கள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளலாம்" என கூறினார்.