சென்னை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அடையாறு மண்டலத்திற்குள்பட்ட 173ஆவது வார்டு, தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காவல் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவானது சுமுகமாக நடைபெற்றுவருவதாகவும், ஒரு சில சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் கூறினார். ஆனால் வாக்குப்பதிவு நிற்கும் அளவிற்குப் பிரச்சனை ஏற்படவில்லை என்றார்.
இதனையடுத்து வேளச்சேரியில் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 16 குண்டர்கள் வாக்களிக்கச் செல்லும்போது, பிரச்சினை ஏற்பட்டதால் காவல் துறையினர் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்திவருவதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடி 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் மேலும், "திருவான்மியூரில் 5000 ரூபாய் பூத் சிலிப் வைத்திருந்த ஒரு பெண்ணை காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரச்சினை நடந்தால் உடனே காவல் துறை சம்பவ இடத்திற்குச் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு இயந்திரங்கள் ஸ்டாங் ரூமிற்கு கொண்டுசென்ற பிறகு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு உள்பட பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்படும். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் 7000 காவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தி உள்ளனர். ஏறத்தாழ 90 விழுக்காடு காவலர்கள் அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈக்காட்டுதாங்கலில் வாக்களித்தார் நடிகர் அருண் விஜய்!