சென்னை:கர்நாடக மாநிலம் மங்களூருவில் 1923 ஏப்ரல் 5 அன்று கே.சங்கர மேனன் - நாராயணி தம்பதிக்குப் பிறந்த சாரதா மேனன் சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் 195ஆம் ஆண்டு மருத்துவக் கல்வியை நிறைவுசெய்தார்.
தேசிய மனநல மற்றும் நரம்பு அறிவியல் மருத்துவ மையத்தின் மனநல மருத்துவப் படிப்பை முடித்து நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவரானார். 1961ஆம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் அரசின் மனநல மருத்துவமனையின் தலைவராகவும் இருந்தார்.
வருத்தம் தந்த துயரச் செய்தி!
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவரது தொண்டினைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு 1992ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தது. அதிமுக ஆட்சிக்காலத்தில் 2016ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கையால் சாரதா மேனன் அவ்வையார் விருதுபெற்றார்.
சென்னையில் உள்ள இந்தியன் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் சாரதா மேனனுக்கு 2016ஆம் ஆண்டுக்கான அன்னை தெரசா நினைவு விருதும் வழங்கப்பட்டது.
1984ஆம் ஆண்டில் ஸ்கார்ப் என்னும் சேவை நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அந்நிறுவனம் மன நோயாளிகளைப் பேணுதல், அவர்களுக்குச் சிகிக்சை, மறுவாழ்வு அளித்தல், தொழில், வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சிகள் அளித்தல் போன்றவற்றைச் செய்துவருகிறது.
இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக டிசம்பர் 5ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்து சாரதா மேனன் (98) காலமானார். அவரது உடல் இன்று (டிசம்பர் 6) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.