தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 1, 2022, 3:51 PM IST

ETV Bharat / city

சென்னையில் புதிய காவல் ஆணையரகங்களை திறந்துவைத்த முதலமைச்சர்

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன. 1) தொடங்கிவைத்தார்.

cm stalin opens New Police Commissionerates, New Police Commissionerates in Tambaram and Avadi, சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது முக ஸ்டாலினின் அறிவிப்பு
புதிய காவல் ஆணையரகங்களை திறந்துவைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல்துறையின் பணிகள் சிறக்கப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பர் 19 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து ஆற்றிய உரையில், “மாறி வரும் குற்றங்கள், மக்களின் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, சென்னை பெருநகரக் காவல் துறையை மற்ற பெருநகரங்களில் உள்ளதுபோல் சீரமைத்திட இந்த அரசு எண்ணியுள்ளது.

காணொலி காட்சி மூலம் திறப்பு

அந்த அடிப்படையில், தாம்பரம், ஆவடி ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு தனித் தனி புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

புதிய காவல் ஆணையரகங்களை திறந்துவைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

அதன்படி, சோழிங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் காவல் ஆணையரகம், ஆவடி சிறப்பு காவல்படை 2ஆம் அணி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவடி காவல் ஆணையரகம் ஆகியவற்றை முதலமைச்சர் இன்று (ஜன. 1) தலைமை செயலகத்தில், காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.

குறைகள் உடனுக்குடன் நிவர்த்தியாகும்...

தாம்பரம் காவல் ஆணையரகம், தாம்பரம், பள்ளிக்கரணை ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 20 காவல் நிலையங்களை உள்ளடக்கி செயல்படும். நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோமங்கலம், மணிமங்கலம் காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாழம்பூர், கேளம்பாக்கம் காவல் நிலையங்கள் தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் இணைக்கப்பட்டுள்ளது.

ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி, செங்குன்றம் ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 25 காவல் நிலையங்களை உள்ளடக்கி செயல்படும். நிர்வாக வசதிக்காக திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெள்ளவேடு, செவ்வாப்பேட்டை, சோழவரம், மீஞ்சூர், காட்டூர் காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையரக எல்லையில் இணைக்கப்பட்டுள்ளது.

தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் புதிதாக அமைக்கப்படுவதன் மூலம் சென்னை புறநகர்ப் பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்கும், போக்குவரத்தினை சீர்படுத்துவதற்கும், சட்டம் ஒழுங்கு தொடர்பான மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: புத்தாண்டு 2022: 'சகோதரனாக' ஸ்டாலின் விடுத்த அன்புக் கட்டளை

ABOUT THE AUTHOR

...view details