சென்னை: தீரன் சின்னமலையின் படைத்தளபதி பொல்லானுக்கு உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், அவரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொல்லானுக்கு மணிமண்டபம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - tamilnadu government announcements
![பொல்லானுக்கு மணிமண்டபம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு Bollan birthday will celebrate as govt festival](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10638375-thumbnail-3x2-bellan.jpg)
18:27 February 15
இந்திய சுதந்திர போராட்டத்தில் கொங்குமண்டலத்திற்கு பெரும்பங்கு உண்டு. சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில், ஓடாநிலையை தலைநகராகக் கொண்டு தீரன் சின்னமலை, ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வந்தார். அந்தப் போர்களில், மூன்றுமுறை மிகப்பெரிய வெற்றியும் பெற்றார்.
தீரன் சின்னமலையின் அந்த வெற்றிகளுக்கு முக்கியக் காரணம் பொல்லான் என்ற அவரின் படைத்தளபதிதான். அதனால் ஈரோடு மாவட்டத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என மக்களும், அருந்ததியர் இளைஞர் பேரவை அமைப்பினரும் போராடி வந்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சருக்கு கடிதமும் எழுதியிருந்தனர். தற்போது அந்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் பொல்லானுக்கு உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என்றும் அவரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.