தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம், குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம், பங்கேற்பு உரிமையை உறுதிபடுத்தும் கூட்டமைப்பு, தமிழக கல்வி உரிமை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, குழந்தைகள் உரிமைக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்து, அதனை சட்ட ஆணைய உறுப்பினரும், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான விமலா வெளியிட்டுள்ளார்.
அந்த தேர்தல் அறிக்கையில், “18 வயதிற்குள்ளான குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, கட்சிகள் தங்களது தோ்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும். கோரிக்கை வைக்க, குரல் எழுப்ப, வாக்களிக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே வாய்ப்பிருப்பதால், குழந்தைகள் தங்கள் உரிமைகளைக் கோர பெரியவர்களை நாட வேண்டியதுள்ளது. ஆகவேதான், குழந்தைகளின் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில், முடிந்தால் குழந்தைகள் உரிமைகளுக்கு என தனி தேர்தல் அறிக்கை வெளியிடவும் வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான உரிமை குறித்து உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா, நமது இடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ”குழந்தைகளை நாம் கொண்டாடினாலும், உரிமைகளுடன் அவர்கள் வளர்கின்றனரா என்றால், இல்லை. இத்தேர்தல் அறிக்கையின் நோக்கம், வெற்றிபெறப்போகும் வேட்பாளர்கள் குழந்தைகள் உரிமைகள் குறித்து சட்டமன்றத்தில் பேசி, அது சட்டமாக்கப்பட்டு, குழந்தைகள் சம்பந்தப்பட்ட திட்டங்கள் வந்து, அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான்.
ஐ.நா குழந்தை உரிமைகளுக்கான சர்வதேச சட்டத்தை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. அதன்படி, குழந்தைகள் உரிமை என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளவிடும் முக்கிய அடையாளம். உயிர் வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு உரிமை, பங்கேற்பு உரிமை என்னும் நான்கினை, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உறுதி செய்ய வேண்டும் என இந்த உடன்படிக்கை பட்டியலிடுகிறது. இந்த உரிமைகளை அரசியலமைப்பு சட்டமும் வழங்கியுள்ளது.