சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.8.2022) சென்னை, கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் 186 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1036 காவலர் குடியிருப்புகளைத் திறந்து வைத்து, 5 காவலர்களுக்கு குடியிருப்புகளுக்கான சாவிகளை வழங்கினார்.
மேலும், உள்துறை சார்பில் 36 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் 32 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 2 காவல் துறை கட்டடங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 11 குடியிருப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணியாளர்களுக்கான 80 குடியிருப்புகள், 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் மற்றும் 1 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கான பாசறை, 55 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 253 வீடுகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.