தமிழ்நாடு

tamil nadu

'க்ரியா' எஸ். ராமகிருஷ்ணன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்!

By

Published : Nov 17, 2020, 5:45 PM IST

க்ரியா பதிப்பகத்தின் உரிமையளர் 'க்ரியா' எஸ். ராமகிருஷ்ணனின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

cm condolence
cm condolence

சென்னை: கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த க்ரியா பதிப்பகத்தின் உரிமையளர் க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் இன்று (நவ. 17) காலமானார். அவரது மறைவிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "தமிழ் பதிப்புலகத்தின் முன்னணி பதிப்பாளரும், க்ரியா பதிப்பகத்தின் ஆசிரியருமான க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

அன்பும், எளிமையும், கடின உழைப்பும் மிகுந்த க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் விளம்பரத் துறையில் பணியாற்றி, பின்னர் தனது 30ஆவது வயதில் பதிப்பகத் துறைக்கு வந்தவர். இவர் 1974 ஆம் ஆண்டு க்ரியா பதிப்பகத்தை தொடங்கினார். தனது பதிப்பகம் மூலம் தற்காலத் தமிழுக்கான அகராதி ஒன்றை வெளியிட்டார். இந்த அகராதி தமிழ் பதிப்புலகத்தில் பெரும் சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் சுற்றுச்சூழல், சுகாதாரம், தத்துவம், தொழில்நுட்பம் எனப் பல தலைப்புகளின்கீழ் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவர் பல்வேறு பிறமொழி புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட பெருமைக்குரியவர்.

க்ரியா எஸ். ராமகிருஷ்ணனின் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்குப் பேரிழப்பாகும். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், பதிப்புலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'க்ரியா' பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் காலானார்

ABOUT THE AUTHOR

...view details