முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள, தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை கடந்த 2015ஆம் ஆண்டு ’அக்னி எஸ்டேட்ஸ் ஃபவுன்டேஷன்’ என்ற நிறுவனத்திற்கு, ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
ஆனால், சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயையும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் 1.35 கோடி ரூபாயையும் வருமான வரி கணக்கில் காட்டப்படவில்லை என, அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது.
இதனைத்தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி லிங்கேஸ்வரன், கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இருவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய அனுமதி வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அன்றைய தினம் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும், ஆஜராகத் தவறினால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மூழ்கும் பொருளாதாரம், தவிக்கும் அரசாங்கம்': ப.சிதம்பரம் கவலை