தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எம்.ஐ.டி. கல்லூரியில் 66 மாணவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு - தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டும்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்கள் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 50 பேருக்கு எஸ் ஜீன் இருப்பது தெரியவந்துள்ளது.

எம்ஐடி கல்லூரியில் 66 மாணவர்களுக்கு ஒமிகிரான் பாதிப்பு
எம்ஐடி கல்லூரியில் 66 மாணவர்களுக்கு ஒமிகிரான் பாதிப்பு

By

Published : Jan 6, 2022, 9:45 PM IST

சென்னை:குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்களில் 80 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, அதில் 50 நபர்களுக்கு எஸ் ஜீன் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர்களுக்கு ஒமைக்ரான் உள்ளதா என்பது குறித்து ஆய்வு-செய்யப்பட்டுவருகிறது.

மேலும் கரோனா உறுதிசெய்யப்பட்ட 80 மாணவர்களும் எம்.ஐ.டி. விடுதி வளாகத்தில் தங்கவைக்கப்பட்டு சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவக் குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

செய்தியாளரைச் சந்தித்த பொன்முடி கூறுகையில், "சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஆயிரத்து 659 மாணவர்களுக்குப் பரிசோதனை செய்ததில் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அதில் 40 மாணவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 41 பேர் விடுதியில் தங்கவைக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

இதில் 39 மாணவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அனைத்து மாணவர்களும் நலமுடன் உள்ளனர். விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நெகட்டிவ் வந்தவுடன் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

66 மாணவர்களுக்கு ஒமைக்ரான்

இன்னும் 262 மாணவர்களுக்குப் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. 66 மாணவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புகள் அதிகரித்தால் தேர்வுத் தேதிகள் ஒத்திவைக்கப்படும். பிறகு அதற்கான தேதி அறிவிக்கப்படும்.

அனைத்து வகை பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதையும் மீறி கல்லூரிகள் நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.

பின்னர் செய்தியாளரைச் சந்தித்த மா. சுப்பிரமணியன் கூறுகையில், "கரோனா அதிவேகமாகப் பரவிவருகிறது. இன்று ஐந்தாயிரத்தைத் தாண்டும், மக்கள் பயப்படத் தேவையில்லை, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கரோனா பாதிப்பு ஏற்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.

உடல் நலத்தில் அதிக பாதிப்பு, வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வசதி இல்லாதவர்கள் சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சைப் பெறலாம். சென்னையில் 30 இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

டெல்டா வகை, ஒமைக்ரான் இரண்டும் கலந்து சுனாமிபோல் பரவிவருகிறது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 78 விழுக்காட்டினர் ஒமைக்ரானால் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க:மாநில அரசே பல்கலை. துணைவேந்தர்களை நியமனம் செய்யும் தீர்மானம்...! - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details