தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 18, 2021, 8:23 PM IST

ETV Bharat / city

சென்னைவாசிகளுக்கு நற்செய்தி: இந்தக் கோடையில் தடையின்றி குடிநீர்!

சென்னை: ஏரிகளில் தண்ணீர் அளவின் கொள்ளளவு முழுமையாக இருப்பதால், இந்த ஆண்டு மாற்று வழி ஆதாரமான நிலத்தடி நீர்வள ஆதாரம், விவசாய ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்டவையை தேட குடிநீர் வழங்கல் வாரியத்திற்குத் தேவை இருக்காது.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம்
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம்

இதுபற்றி குடிநீர் வாரியத்தின் அலுவலர்கள் கூறுகையில், "2020ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவ மழையாலும், ஜனவரி மாதம் பெய்த மழையாலும், பெருநகர ஏரிகளில் நீரின் இருப்பளவு நன்றாகவே உள்ளது. எனவே சென்னைவாசிகளுக்கு நாள்தோறும் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் (MLD) விநியோகிக்கப்படுகிறது.

2018, 2019ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சிக் காரணமாக 650 மில்லியன் லிட்டர் குடிநீர்தான் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் நகரத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது.

ஏரிகளில் முழுக்கொள்ளளவு

பெருநகரத்தைப் பொறுத்தவரை குடிநீர் விநியோகத்தின் தேவை பெரிதளவு குறைந்துள்ளது என்று சொல்லலாம். இருப்பினும், கோடைகாலம் என்பதால் வழக்கமாக குடிநீர் வாரியம் 100 அல்லது 200 ஒப்பந்த லாரிகளை இயக்கும். வறட்சி என்றால் 300-க்கும் மேற்பட்ட லாரிகளை இயக்கும்.

அந்த வகையில் இந்தாண்டு 100 லாரிகளை இயக்க முடிவுசெய்துள்ளது. மேலும், ஏரிகளில் தண்ணீர் அளவின் கொள்ளளவு முழுமையாக இருப்பதால், இந்த ஆண்டு குடிநீர் வழங்கல் வாரியம், மாற்று வழி ஆதாரமான நிலத்தடி நீர்வள ஆதாரம், விவசாய ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்டவையை தேட வாரியத்திற்குத் தேவை இருக்காது.

பெருநகர ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகளில் நீரின் கொள்ளளவு இன்றைய (மார்ச் 18) நிலவரப்படி, 98,777 மில்லியன் கன அடியாக உள்ளது. 2020 ஜனவரி 1ஆம் தேதியன்று 10,859 மில்லியன் கன அடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details