தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மகிழ்ச்சியைத் தாண்டி அச்சத்தைக் கிளப்பும் சென்னை மழை!

சென்னை என்றால் தண்ணீர்த் தட்டுப்பாடு எந்த அளவு இருக்குமோ, அந்தளவு மழைநீர் தேங்குவது, வெள்ளம் தேங்குவது போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. 2015ஆம் ஆண்டின் வெள்ளத்திற்குப் பிறகு சென்னைவாசிகளைச் சூழ்ந்துகொண்டுள்ளது அந்த அச்சம்.

chennai floods discussed
chennai floods discussed

By

Published : Dec 13, 2020, 6:27 AM IST

Updated : Dec 15, 2020, 12:57 PM IST

சென்னை: முன்னர் பெரும் மழை வந்தால் தண்ணீர் பிரச்சினை இருக்காது என்ற மகிழ்வு இருக்கும் நிலை மாறி, பெரும் மழை பெய்தால் 2015 போல் ஆகிவிடுமா என்ற அச்சம் சென்னைவாசிகளைச் சுற்றிவருவதை மறுக்க முடியாது.

அண்மையில் 'நிவர்' புயலினால் பொழிந்த மழை, சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்படுத்தாவிட்டாலும் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்பட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றமே பாராட்டுகள் தெரிவித்திருந்தாலும், நீர் மேலண்மையில் தமிழ்நாட்டின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

2015ஆம் ஆண்டு பெய்த மழையினால் பல ஏரிகள் நிரம்பின. ஆனால் 2019ஆம் ஆண்டில் சென்னை வறட்சியின் உச்சத்தை அடைந்தது. இதற்குக் காரணம் சரியான நீர் மேலாண்மைத் திட்டம் தமிழ்நாட்டில் இல்லை என்பதே எனச் சொல்லப்படுகின்றது. அதேபோல் சரியான நீர் மேலாண்மைத் திட்டம் இல்லாத காரணத்தினாலே சென்னையில் வெள்ளம் போன்றவை ஏற்படுகின்றது என்ற கருத்துக்களும் நிலவுகிறது.

இது குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய நீரியல் ஆராய்ச்சி வல்லுநர் ஜனகராஜன் தெரிவிக்கையில், “நீர் மேலாண்மை குறித்து அதிக மழை பொழியும் போதும் அல்லது அதிக வறட்சியின் போதும் மட்டும் பேசுவது நம்மிடம் இருக்கும் மிகப் பெரிய சிக்கல். முதலில் நமக்கு எவ்வளவு மழை கிடைக்கின்றது. எவ்வளவு மழை சேமிக்கின்றோம் போன்றவை குறித்து தெளிவாக இருக்க வேண்டும்.

இதை நாம் சரியாகச் செய்யவில்லை. மழை மூலம் கிடைக்கும் தண்ணீர் என்ன ஆகின்றது, அதை எங்கு சேமித்துவைக்கின்றோம். இல்லை கடலுக்குச் சென்றதா போன்றவைகள் குறித்த தெளிவு இல்லை.

இரண்டாவதாக அணை, ஏரி, ஆறு போன்றவற்றை எவ்வாறு பராமரிக்கின்றோம் என்பதில் இருக்கின்றது. குறிப்பாக ஏரி, குளம், குட்டை, ஆறு போன்றவையை சரியாகத் தூர்வார வேண்டும். அதைச் செய்ய தவறிவருகின்றோம். அரசு செய்வதாகக் கூறுகின்றது. ஆனால் அதை முழு ஈடுபாடோடு செய்ய வேண்டும்.

சமீபத்தில் பல ஏரிகள் நிரம்பியதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் அது அப்படி இல்லை. தூர்வாராமல் இருப்பதால் அது விரைவாக நிரம்பிவருகின்றது. இதைச் செய்தால் நிலத்தடி நீரை நம்மால் சேமிக்க முடியும். வெள்ளம் வரும்போது நிலத்தடி நீரைச் சரியாக ஊக்குவிக்க நடவடிக்கை வேண்டும்" எனத் தெரிவித்தார்.

நீர் மேலாண்மை குறித்து விரிவாக விளக்கும் நீரியல் ஆராய்ச்சி வல்லுநர் ஜனகராஜன்

தொடர்ந்து பேசிய அவர், "உண்மையில் நாம் மழைநீரைச் சேமிப்பது இல்லை. தற்போதெல்லாம் மழை வந்தால் பயம் வருகின்றது. மழை வந்தால் ஏன் பயம் வர வேண்டும். நீர் மேலாண்மையைச் சரியாக அமல்படுத்தினால் வருங்காலங்களில் வெள்ளம் போன்றவை இல்லாமல் இருக்கும்.

செம்பரம்பாக்கம் உள்பட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மட்டும் சுமார் 3,600 ஏரிகள் உள்ளன. இதைச் சரியாக ஆழம் படித்து தூர்வாரினால் வெள்ளம் இருக்காது அத்தோடு தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்காது" எனத் தெரிவித்தார்.

நீர் மேலாண்மையில் நாட்டிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கதாகும்.

Last Updated : Dec 15, 2020, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details