சென்னை: திருப்பூர் மாவட்டம் தத்தன் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (46). இவர் திருப்பூரில் ஜவுளித் தொழில் செய்துவருகிறார். தொழிலதிபரான குமாருக்குச் சென்னை நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது.
சங்கர் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றித்தருவதாகவும், அதற்கு தரகுத்தொகை தர வேண்டும் எனவும் தொழிலதிபர் குமாரிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய குமார் ஐந்து கோடி ரூபாய் வெள்ளையாக மாற்றித் தருமாறு சங்கரிடம் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னை வருமாறு சங்கர் கூறியுள்ளார்.
இதையடுத்து குமார் தனது காரில் ஒரு கோடி ரூபாய் எடுத்துக்கொண்டு சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் விடுதிக்கு நேற்று முன்தினம் வந்தார்.
கறுப்புப் பணத்தைக் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டல்
இந்நிலையில், சாந்தி காலனியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய தனது நண்பரான விஜயகுமாரிடமிருந்து பணம் பெற்றுத் தருவதாகக் கூறி காரில் இன்று (ஜனவரி 7) அண்ணாநகர் அரசு மருத்துவமனை அருகே சங்கர், குமார் ஆகியோர் மதியம் 12 மணிக்குச் சென்று காத்திருந்தனர்.