2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தற்போதைய திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இரண்டு கோடியே 80 லட்சம் ரூபாய் வரை பெற்று பலரிடம் மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது மத்தியக் குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். செந்தில் பாலாஜி சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.
இந்த மோசடி வழக்கில் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை முன்னாள் இயக்குநர் கணேசன், கடந்த நவம்பர் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 40 நாள்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கணேசன், பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் முன் இன்று (டிச.17) விசாரணைக்கு வந்தது.