கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து தவறான கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் ஆர்.எஸ். பாரதி கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவருக்குப் பிணை வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தப் பிணையை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், கடும் நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் ஆர்.எஸ். பாரதிக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாகவும், தொற்று நோய் பரவலைக் காரணம் காட்டி பிணை வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.