தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய நவ. 30ஆம் தேதி தமிழ்நாடு வரும் மத்தியக் குழு! - நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய தமிழ்நாடு வரும் மத்திய குழு

சென்னை : நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்திய உள் துறை இணைச் செயலர் அசுதோஷ் அக்னி ஹோத்ரி தலைமையிலான மத்தியக் குழு வரும் 30ஆம் தேதி இரவு தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Central team to visit Tamil Nadu on November 30 to study the effects of Nivar storm
நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய நவ.30ஆம் தேதி தமிழ்நாடு வரும் மத்திய குழு!

By

Published : Nov 28, 2020, 6:13 PM IST

வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உருவாகி, நவம்பர் 25ஆம் தேதி வீசிய நிவர் புயலால் தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அத்துடன், வீசிய சூறைக்காற்றால் ஏராளமான வேளாண் நிலம் பாதிப்புக்குள்ளாகின.

அறுவடைக்கு ஆயத்தமாக இருந்த நெற்பயிர்கள் புயல், மழையில் முற்றாக அழிந்தன. புயல் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து, மின்சாரம் தடைப்பட்டது. நூற்றுக்கணக்கான குடிசைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடலோரப் பகுதிகளில் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் தலா 10 லட்ச ரூபாயும், பயிர்ச்சேதங்கள், கால்நடைகள் உயிரிழந்தது குறித்து மதிப்பீடு செய்து நிவாரண உதவி வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதனிடையே, நேற்று (நவ. 27) நிவர் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது, நிவர் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய மத்தியக் குழு அனுப்பிவைக்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய நவ.30ஆம் தேதி தமிழ்நாடு வரும் மத்திய குழு!

இந்நிலையில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய மத்திய உள் துறை இணைச் செயலர் அசுதோஷ் அக்னி ஹோத்ரி தலைமையில் மத்திய வேளாண்மை, சாலைப் போக்குவரத்து, நிதி, மின் துறை, ஊரக வளர்ச்சி, நீர் மேலாண்மை, மீன்வளம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் வரும் நவ. 30ஆம் தேதி இரவு தமிழ்நாட்டிற்கு வருகைதர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள் துறை இணைச் செயலர் அசுதோஷ் அக்னி ஹோத்ரி

சென்னை தலைமைச் செயலகத்தில் டிசம்பர் 1ஆம் தேதி அன்று தமிழ்நாடு தலைமைச் செயலர் சண்முகத்துடன் ஆலோசனை நடத்திய பின், அக்குழுவானது தமிழ்நாடு, புதுச்சேரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஆய்வுகளை முடித்த பின்னர் தமிழ்நாடு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.

நிவர் புயல் சேதத்தை ஆய்வுசெய்யும் மத்திய குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி உதவி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மருத்துவர் நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details