தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 22, 2021, 5:22 PM IST

ETV Bharat / city

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை - பிராந்திய மொழிகளில் வெளியீடு

டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவின்படி சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை, அனைத்து பிராந்திய மொழிகளிலும் வரும் அக்டோபர் 21ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Chennai High Court
Chennai High Court

சென்னை:சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை கடந்தாண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்டது. ஏப்ரல் மாதம் ஆங்கிலம், இந்தி மொழிகளில் வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது. அது தொடர்பான கருத்துகள், ஆட்சேபனையை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

பிராந்திய மொழிகளில் அதன் மொழிப்பெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள், ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையதல்ல என்பதால் வரைவு அறிக்கை மீதான நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என மீனவ தந்தை கே.ஆர். செல்வராஜ் குமார், மீனவர் நல சங்கத்தின் தலைவர் தியாகராஜன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.

60 நாள்கள் அவகாசம்

அதேபோல வரைவு அறிக்கை பிரிவுகளை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதை தமிழில் வெளியிட்டால்தான் தமிழ்நாட்டு மக்களால் ஆட்சேபங்களைத் தெரிவிக்க முடியும் என்பதால் தமிழில் வெளியிட வேண்டும் எனவும், அதன் மீது கருத்துக்களை தெரிவிக்க 60 நாள்கள் அவகாசம் வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பூவிலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் வழக்குத் தொடர்ந்தார்.

விசாரணை 8 வாரங்களுக்கு தள்ளிவைப்பு

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவின்படி அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கை அக்டோபர் 21ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் எனவும் அது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

வரைவு அறிக்கை குறித்த கருத்துக் கேட்பு, விரிவாக நடத்த வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, கருத்துக் கேட்பு விரிவாக நடத்துவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை எட்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:'முந்திரி ஆலை தொழிலாளர் மரணம்; நீதி பெற்றுத் தருவது எப்போது?'

ABOUT THE AUTHOR

...view details