தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 15, 2021, 9:36 PM IST

Updated : Mar 15, 2021, 10:06 PM IST

ETV Bharat / city

உள்ளாட்சிகளை நிராகரிக்கலாமா தேர்தல் அறிக்கைகள்?

உள்ளாட்சிகளை வலுப்படுத்துவதில், ஆட்சியியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் அரசியல் கட்சிகளின் பங்கு மிக முக்கியமானது. எனவேதான், கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வரும் தன்னாட்சி, Institute of Grassroots Governance, மக்களின் குரல் (Voice of People), அறப்போர், தோழன் போன்ற சமூக அமைப்புகளின் சார்பாக, உள்ளாட்சிகளுக்கான அவசியமான கோரிக்கைகளை, தேர்தல் அறிக்கை வடிவில் தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கட்சிகளுக்கும் கொண்டு சேர்த்தோம்.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

ஆனால், கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, நிதிப் பகிர்வு, உள்ளாட்சிகளை வலுப்படுத்தும் உரியச் சட்டத் திருத்தங்கள் கொண்டு வருவது உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் திமுக, அஇஅதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறாதது, மாநில சுயாட்சி பேசும் கட்சிகள் உள்ளாட்சிகளை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பதையே காட்டுகிறது.

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்காத தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் பெருத்த ஏமாற்றம் அளிக்கின்றன. கிராம சபைகளை வலுப்படுத்துவது பற்றியோ, பொதுவான நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான சட்டங்கள் கொண்டு வருவது குறித்தோ, ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் அமைப்பது பற்றியோ, தொடர்ந்து தடைப்பட்டு வரும் உள்ளாட்சிகளுக்கான முறையான நிதிப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு குறித்தோ எந்த ஒரு வாக்குறுதியையும் இந்தக் கட்சிகள் தராதது வருத்தமளிக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் உள்ளாட்சிகள் குறித்து எந்தவொரு வாக்குறுதியும் வழங்கப்படவில்லை. இன்னும் சில முக்கிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை. மக்கள் நீதி மய்யம், தங்கள் முழுமையான தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடாத நிலையில், கடந்த மாதம் உள்ளாட்சிகளுக்கான சில குறிப்பிடத் தகுந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள சில வாக்குறுதிகளில், உள்ளாட்சிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிட்டுள்ளது. இந்த முன்னெடுப்புகள் முழுமையானவையல்ல என்ற போதும் நிச்சயம் வரவேற்கத்தக்கவை.

சமூக அமைப்புகளின் தொடர் கோரிக்கை

2016இல் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மட்டும் 3 ஆண்டுகள் கழித்து 2019இல் நடைபெற்றன. அதிலும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் இன்னும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் 4 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் நடந்தபாடில்லை. 2020ஆம் ஆண்டு ஜனவரி 26க்குப் பிறகு ஓராண்டுக்கு மேலாக கிராமசபைக் கூட்டங்கள் நடக்கவில்லை. ஊராட்சிகள் கடும் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன. ஊராட்சிமன்றத் தலைவர்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர். ஊராட்சி விவகாரங்களில் மாவட்ட நிர்வாகம் தலையிடுவதாக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இவையனைத்தும் அஇஅதிமுக ஆட்சியில் நடந்தவை என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.

இந்தச் சூழலில்தான், உள்ளாட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துப் பல சமூக அமைப்புகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

கிராமசபையும், உள்ளாட்சி கோரிக்கைகளும்!

கடந்த அக்டோபர் 2இல் கிராமசபைக் கூட்டம் அறிவிக்கப்பட்டு பின்பு ரத்து செய்யப்பட்ட போது, அதனை உடனடியாக நடத்த வலியுறுத்தி சமூக இயக்கங்கள் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டன. அக்டோபர் 2இல் கிராமசபைக் கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்ற அழைப்பு விடுத்தன திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்.

ஆனால், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவின் தேர்தல் அறிக்கையில், கிராமசபைக் கூட்டங்களை வலுப்படுத்துவது குறித்தோ, கிராமசபைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றோ எந்தவொரு வாக்குறுதியும் இல்லை.

உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவோம் எனப் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, நம்பிக்கை அளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார் திமுக தலைவர். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் நிதி மற்றும் நிர்வாக சவால்களைச் சரிசெய்ய எந்த வாக்குறுதியும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

திமுகவின் ஊராட்சி சபைகள்/ மக்கள் கிராமசபைகள் அரசியல் ஆதாயத்திற்கானவையா?

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு 'ஊராட்சி சபை' என்று தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட திமுக, தற்போது சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலுக்கு முன் 'மக்கள் கிராம சபை' எனப் பெயரிட்டு கிராமங்கள் தோறும் பரப்புரை மேற்கொண்டது. 'ஊராட்சி சபை', 'மக்கள் கிராமசபை' எனத் தனது பரப்புரைகளுக்குப் பெயரிட்டுக் கொண்ட திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ஊராட்சி வளர்ச்சிக்கான வாக்குறுதிகளோ கிராமசபைகளை வலுப்படுத்துவதற்கான வாக்குறுதிகளோ இடம்பெறாதது எதேச்சையானதா என்று யோசிக்கத் தோன்றுகிறது.

உள்ளாட்சியை கைகழுவிய அதிமுக

2016இல் இருந்து உள்ளாட்சிகளை கிள்ளுக்கீரையாக நடத்தி வந்தது அதிமுக அரசு. நடத்தப்படாத இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம் என்ற வாக்குறுதியைக் கூட கொடுக்க விரும்பவில்லை அந்தக் கட்சி. உள்ளாட்சியை அதிமுக முற்றிலும் கைகழுவியுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது. உள்ளாட்சிகளின் மீது உண்மையில் அக்கறை இருக்குமானால், அதிமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் உள்ளாட்சிகளுக்கான வாக்குறுதிகளை இணைக்க வேண்டும்.

உள்ளாட்சிகளுக்கான வாக்குறுதிகளை வழங்குக!

சமூக இயக்கங்களின் கோரிக்கைகளை ஏற்று, சுற்றுச்சூழல், ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் திமுகவின் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது உண்மையில் வரவேற்கத்தக்கது. சாமானிய மக்களின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கும் உள்ளாட்சிகளை வலுப்படுத்துவதற்கான வாக்குறுதிகளையும் திமுக, தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இணைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேர்தல் அறிக்கைகளை இதுவரை வெளியிடாத பிற கட்சிகள், பெருவாரியான மக்களைப் பாதிக்கும் உள்ளாட்சி விவகாரங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான வாக்குறுதிகளை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

அதிகாரம் மத்தியில் குவியக் கூடாது என்று எந்த அளவு தமிழ்நாடு வலியுறுத்தி வருகிறதோ, அதே அளவிற்கு மாநிலத்திலும் அதிகாரங்கள் குவிந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும். சாமானிய மக்களுக்கான அரசாக இருக்கிற உள்ளாட்சிகளை வலுப்படுத்துவது தொடர்பாக உரிய வாக்குறுதிகளை அனைத்து கட்சிகளும் வழங்கி, ஜனநாயகம் தழைக்க செயலாற்ற வேண்டுமென சமூக இயக்கங்களின் சார்பாக கோருகிறோம்.

Last Updated : Mar 15, 2021, 10:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details