கடந்த 45 நாள்களாக ஊரே அடங்கியிருந்ததிலிருந்து இன்றுதான் தேனீர் கடை, வீட்டு உபயோகப் பொருட்கள் கடை என சிலக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அரசு. ஆனால், முடித்திருத்தகம், அழகு நிலையங்கள் ஆகியவற்றிற்கு மட்டும் அனுமதியளிக்காமல் அரசு தடையை நீட்டித்துள்ளது.
பெரும்பாலும் வசதியற்ற, சுயமுன்னேற்ற எண்ணம் கொண்ட பெண்களாலும், திருநங்கைகளாலும் நடத்தப்பட்டு வரும் அழகு நிலையங்கள், தொடர்ந்து பூட்டியே கிடப்பதால், இனிமேலும் இத்தொழிலில் நிலைக்க முடியுமா என்ற அச்சத்தை அவர்களுக்கு விதைத்துள்ளது. ஏனெனில், பெரும்பாலும் வங்கி, சுய உதவிக் குழுக்களில் பெற்றக் கடன் மூலமே இவற்றை அப்பெண்கள் நடத்தி வருகின்றனர். ஒரு மாதத்திற்கும் மேலாக கடை மூடப்பட்டிருப்பதாலும், கரோனா அச்சம் மக்களிடையே மிகுந்துள்ளதாலும், அடுத்தடுத்த மாதங்களில் இத்தொழிலின் வரவேற்பு நிலையை எண்ணி கவலையில் உள்ளனர், அழகு நிலையம் நடத்தும் பெண்கள்.
அழகு நிலையங்கள் இயங்க ஒருவேளை நாளையே அனுமதி அளிக்கப்பட்டாலும், அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றுவதற்கு கூட பொருளாதாரமின்றி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் இவர்கள். முகக்கவசம், கையுறைகள், டிஷ்யூ பேப்பர், சானிடைசர் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கே பெரும் தொகை தேவைப்படும் என்பதால், தமிழ்நாடு அரசு நல்லதொரு தீர்வை தங்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கோருகின்றனர்.