சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகள் பற்றி மட்டுமே கவலைப்படுகிறாரே தவிர கூட்டுப் பொரியல் பற்றி கவலைப்படுவதில்லை எனவும் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 46ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பாக ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அங்கு இருந்த காமராஜர் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செய்தார்.
மாணவர்களுக்குப் பொரியல் இல்லை
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த ஜெயக்குமார், "ஊரகப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைத்து தொழில் வளர்ந்தால் தமிழ்நாடு வளரும் என்று பல விஷயங்களை காமராஜர் முன்னெடுத்தார். தொழிற்சாலைகள் கட்டுவது, அணைகள் கட்டுவது, கல்விக்கூடங்கள் கட்டுவது என அடிப்படையான விஷயங்கள் அவரின் சிந்தனையில் உதித்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்றார்.
திமுக தோழமைக் கட்சியின் கொடியை சில இடங்களில் ஏற்ற முடியவில்லை என்று சொல்கின்றனர். தமிழ்நாட்டில் நிலை எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். திருமாவளவன் காவல் துறையினரைக் குறை சொல்கிறார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் பற்றிப் பேசுவதில்லை. திருமாவின் வீரம் எங்கே சென்றது?" எனக் கேள்வி எழுப்பினார்.