தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யுபிஎஸ்சி முதன்மைத்தேர்வில் அரசு மையத்தில் படித்த 12 பேர் தேர்ச்சி - 12 தேர்வர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி

தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற 12 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 3 தேர்வர்கள், தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்து தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

Anna Cilvil Service Coaching Centre
Anna Cilvil Service Coaching Centre

By

Published : Mar 18, 2022, 9:13 PM IST

சென்னை:அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சித் துறைத் தலைவரும், தலைமைச் செயலாளருமான இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப்பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இப்பயிற்சி மையத்தில் 2021-2022ஆம் ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற மொத்தம் 80 தேர்வர்களில், 12 தேர்வர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

தேர்வர்களுக்கு அளிக்கப்பட்ட வசதிகள்

இவர்களில், 3 தேர்வர்கள், தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்து தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்பதும், மொத்த தேர்ச்சி பெற்றுள்ளவர்களில் 2 தேர்வர்கள் மகளிர் ஆவர். இதில், மாற்றுத்திறனாளி ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு, 2021 நவம்பர் 10 முதல், 2022 ஜனவரி 16 வரை, உண்டு உறைவிடத்துடன் கூடிய தனி அறை வழங்கப்பட்டு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. தேர்வினை சிறந்த முறையில் எழுதுவதற்கு, பயிற்சி மையத்திலிருந்து, தேர்வு மையத்திற்கு சென்று வர, சிறப்புப் பேருந்து வசதி செய்து தரப்பட்டது.

மாதத்திற்கு ரூ. 3 ஆயிரம்

மேற்குறித்த காலத்திற்கு, ஊக்கத்தொகையாக, தேர்வர் ஒருவருக்கு ரூ. 3 ஆயிரம் (ஒரு மாதத்திற்கு) வீதம் வழங்கப்பட்டது. அவ்வப்போது, தேர்வர்களுக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு, மையத்தில், நிரந்தரப் பாதுகாப்புமுறை பின்பற்றப்பட்டது.

தற்போது, இந்த மையத்தில் தேர்ச்சிப் பெற்றுள்ள தேர்வர்களுக்கு, இப்பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமைத்தேர்வு, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற குடிமைப் பணி அலுவலர்களாலும், தலை சிறந்த வல்லுநர்களாலும் நடத்தப்பட உள்ளது. இது,தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள், தங்களது மாதிரி ஆளுமைத் தேர்வை மிகச்சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும்.

பிற தேர்ச்சியாளர்களும் பங்குபெறலாம்

தேர்ச்சி பெற்றுள்ள மேற்குறித்த தேர்வர்கள் தவிர, மேற்குறித்த முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பிற தேர்வர்களும், இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர். இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது விருப்பத்தினை, aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 94442 86657 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கோ அல்லது 044-24621909 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம்.

மாதிரி ஆளுமைத்தேர்விற்கான தேதி குறித்த விவரங்கள், இம்மையத்தின் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். மேற்குறித்த ஆளுமைத் தேர்விற்காக டெல்லி செல்லும் இம்மையத்தில் பயின்று தேர்வான தேர்வர்களுக்கு, பயணச் செலவுத் தொகையாக ரூ.2 ஆயிரம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தது. சென்ற ஆண்டு அது ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித்தேர்தல் தோல்வியால் பழனிசாமி பிதற்றுகிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details