சென்னை: இளநிலை மருத்துப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 14 ஆம் தேதிகளில் நடந்தது. தேர்வு முடிவுகள், கடந்த 16 ஆம் தேதி, தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது. அதில் 7 லட்சத்து 71 ஆயிரத்து 500 மாணவர்கள் மருத்துவப்படிபில் சேர தகுதிப் பெற்றுள்ளனர்.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வினை மருத்துவக் கலந்தாய்வு குழு நடத்தி வருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேர விரும்பும் மாணவர்கள் https://mcc.nic.in/UGCounselling என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்துக் கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், 15 விழுக்காடு இடங்கள் இந்த கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும். மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்க அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை பதிவு செய்து, கட்டணங்களை செலுத்தலாம். மாணவர்கள் தங்கள் தேர்வு செய்ய உள்ள கல்லூரிகளின் இடங்களை ஆன்லைன் மூலம் அக்டோபர் 28 ஆம் முதல் நவம்பர் 2 ஆம் தேதி 7 மணி வரை பதிவு செய்யலாம்.