தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உர சேமிப்பு கிடங்குகளில் வேளாண்மை துறையினர் அதிரடி சோதனை... - Deputy Director of Agriculture in Chennai

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஆறு உர உற்பத்தி நிறுவனங்களின், ஒன்பது உர சேமிப்பு கிடங்குகள் மற்றும் மொத்த உர விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 27, 2022, 11:46 AM IST

சென்னை: தமிழ்நாடு வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில், சென்னை வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினரால், (செப்.22) கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஆறு உர உற்பத்தி நிறுவனங்களின், ஒன்பது உர சேமிப்பு கிடங்குகள் மற்றும் மொத்த உர விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், இரண்டு மொத்த உர விற்பனை கடைகளின், வேப்பம் புண்ணாக்கு, ஜிங்க் சல்பேட் மற்றும் சர்க்கரை ஆலைக்கழிவிலிருந்து பெறப்படும் பொட்டாஷ் உர வகைகளை சோதனை செய்தனர். அதில், உரங்களின் புத்தக இருப்பிற்கும், உண்மை இருப்பிற்கும் வித்தியாசங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, இருப்பில் இருந்த 95.730 மெ.டன் உரங்களுக்கு விற்பனை தடை வழங்கப்பட்டது.

மேலும், உர உற்பத்தி நிறுவனங்களின் உரச்சேமிப்பு கிடங்குகளில், காம்ப்ளக்ஸ், டிஏபி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் மற்றும் ராக் பாஸ்பேட் போன்ற உரங்கள் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ற்கு புறம்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவை, கைப்பற்றப்பட்டு மொத்தம் 3,078.800 மெ.டன் உரங்களுக்கு விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985–ல் பட்டியலிடப்படாத இடுபொருள் 22.250 மெ.டன் இருப்பில் உள்ளதற்கும் விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது.

ஆய்வின் போது, வேளாண்மைத்துறையின் “O” படிவம் ஒப்புதல் மற்றும் உரிய பதிவேடுகள் இல்லாத நீரில் கரையும் உரங்கள் சிப்பமிடும் பிரிவிற்கும் விற்பனை தடை விதிக்கப்பட்டது.

ஆய்வில், உர நிறுவனத்திற்குரிய உயிர் ஊக்கியின், கொள்கலன் உறைகளில் உள்ள லேபிளில் அடக்கப் பொருட்களின் அளவு குறிப்பிடப்படவில்லை. இதனால், உயிர் ஊக்கி- 14.820 மெ.டன்னிற்கு விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில் உள்ள உயிர் ஊக்கி தயாரிப்பு நிறுவனத்தில் இருப்பில் உள்ள 12.600 மெ.டன் உயிர் ஊக்கிக்கு விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது இருப்பு வைக்கப்பட்ட உர குவியல்களிலிருந்து, 13 உர மாதிரிகள் சேகரித்து ஆய்வகங்களுக்கு தரப்பரிசோதனை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் உரம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள உர சேமிப்பு கிடங்குகளில் உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985-ன்படி, அனுமதி வழங்கிய உரங்களை மட்டும் உரிய பதிவேடுகளோடு பராமரித்து இருப்பு வைக்க வேண்டும்.

மேலும், வேளாண் பெருங்குடி மக்களுக்கு உரிய காலத்தில் தட்டுப்பாடின்றி தரமான உரங்கள் கிடைப்பதற்கு இது போன்ற திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் சுற்றுச்சூழல் எக்ஸ்போ...

ABOUT THE AUTHOR

...view details