தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று(ஜூலை.01) தலைமைச் செயலகத்தில், சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (IGSS Ventures – IGSSV), தமிழ்நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு செமிகண்டக்டர் உயர் தொழில் நுட்பப் பூங்காவை அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் திருவாளர்கள் IGSS வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில், இத்திட்டத்தில் 25,600 கோடி ரூபாய் முதலீடு செய்திடவும், 1500 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. சர்க்யூட் வடிவமைப்பாளர்கள், உற்பத்திப் பொருள் விநியோகஸ்தர்கள், உபகரண விநியோகஸ்தர்கள் மற்றும் செமிகண்டக்டர் அவுட்சோர்சிங் மற்றும் பரிசோதனை நிறுவனங்கள் (Outsourcing and Testing Semiconductor - OSATS) ஆகிய திட்டங்கள் இந்த பூங்காவில் அமைக்கப்படும்.
இதன் காரணமாக உருவாகக்கூடிய சூழல் அமைப்புகளின் மூலம் 25,000 நபர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (IGSS Ventures – IGSSV), ஒரு செமிகண்டக்டர் தொழில் நுட்ப குழுமமாகும்.