தமிழ்நாடு

tamil nadu

சட்ட போராட்டம் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? - நடிகர் சங்கத்துக்கு நீதிபதிகள் கேள்வி!

By

Published : Sep 17, 2020, 5:07 PM IST

Updated : Sep 17, 2020, 7:03 PM IST

chennai high court
chennai high court

17:02 September 17

நடிகர் சங்க தேர்தல் வழக்கில், நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்துவதா? வாக்கு எண்ணிக்கை நடத்துவதா? என்பது குறித்து நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர் தரப்பினர் செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிராக சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று(செப்.17) நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் தரப்பு வழக்கறிஞர் கபீர், "தேர்தலை தள்ளிவைக்க மட்டுமே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்களுடைய பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை. பதவிக்காலம் முடிந்து விட்டதால் அதன் பின் பொதுக்குழுவில் எடுத்த முடிவுகளும் செல்லாது எனக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல என வாதிட்டார். 

அதைத்தொடர்ந்து, நடிகர் தரப்பு மற்றொரு வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், "நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகள் முடியும் வரை தேர்தலை தள்ளிவைக்க பொதுக்குழுவில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள், பதிவாளருக்கு மனு அளித்திருக்க வேண்டும் என சங்கங்கள் பதிவுச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குறிப்பிட்ட சில உறுப்பினர்களின் புகாரின் அடிப்படையில் தேர்தலை நிறுத்தி வைத்து பதிவாளர் உத்தவிட்டது சட்ட விரோதமானது. எந்த அதிகாரத்தின் கீழ் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து பதிவாளர் உத்தரவிட்டார் என்பதை அரசு தெளிவாக குறிப்பிடவில்லை. அரசு தான் சங்க தேர்தலை தடுத்து நிறுத்தியுள்ளது எனப் புகார் தெரிவித்தார்.

பின்னர் எதிர்மனுதாரர் ஏழுமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேஷ், பொதுக் குழுவில் பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை என எதிர் மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேர்தல் முடிந்த பின்னர் வழக்குகளை தொடர்ந்து நடத்துவது ஏன் என புரிந்து கொள்ள முடியவில்லை. 

மேலும், தொழில் முறை அல்லாத 60 உறுப்பினர்களை தவிர்த்து, மற்ற வாக்குகளை எண்ணி பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும். ஏனென்றால் கரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும், நாட்டுப்புற கலைஞர்களுக்கும் உதவ வேண்டியுள்ளது என இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள், "இந்த சட்ட போராட்டம் மூலம் இரு தரப்பினரும் என்ன சாதிக்கப் போகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பி, மறு தேர்தல் நடத்துவதாக இருந்தால் மேலும் ஒரு தேர்தல் அலுவலரை நியமிக்கலாம் என யோசனை தெரிவித்தனர். அப்போது, விஷால் தரப்பில், கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலுக்கு 30 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில் மறு தேர்தல் நடத்த சாத்தியமில்லை எனவும் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏழுமலை தரப்பு வழக்கறிஞர், தொழில் முறை உறுப்பினர்களை, தொழில் முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றியதால் 400 உறுப்பினர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதக குற்றம் சாட்டினார். இறுதியாக நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்து அதற்குள் நீதிபதிகள், மறு தேர்தல் நடத்துவதா? அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா? என்பது குறித்து இரு தரப்பும் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:சூர்யாவின் நன்கொடை பணம் 2 ஆயிரம் உறுப்பினர்களுக்கு பிரித்து வழங்கப்படும் - நடிகர் சங்கம்

Last Updated : Sep 17, 2020, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details