சென்னை: தேசிய வனவிலங்கு வாரியத்தின் நான்கு முன்னாள் உறுப்பினர்கள், வனவிலங்கு விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சென்னை ஆதரவுக்குழு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (ஆக. 25) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், "தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவியல் வல்லுநர்கள் குழு, பாதரசம் கலந்த மண்ணிற்கு பாதுகாப்பு கவசமாக இருந்த 300க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட அனுமதித்திருப்பது இந்தியாவின் வனவிலங்குகளுக்கு எதிரான குற்றம்.
அறிவியல் அடிப்படையை மறுக்க முடியாது
அறிவியல் முடிவுகளுக்கு அறிவியல் அடிப்படை தேவை. உதகமண்டலத்தில் உள்ள ஒன்றிய அரசின் மண், நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட ஆய்வின்படி, பாதரச மாசுகளை சுத்தம் செய்யவதற்கு எடுக்கவேண்டிய மண்பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது, மரங்கள் வெட்டப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இதன் அடிப்படையில்தான் முழு சீரமைப்புத் திட்டமும் உருவாக்கப்பட்டது. இந்த ஆலோசனையை அறிவியல் நிபுணர் குழு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை ஆகியவை அறிவியல் அடிப்படையையோ அல்லது காடுகள் அழிப்பினால் ஏற்படும் பாதிப்புகளை மதிப்பீடு செய்யாமலோ ஒதுக்கி வைக்க முடியாது.
100 கிலோ பாதரசம்
இதன்மூலம், 'பாம்பார்' சோலைக்கு ஆபத்தை விளைவித்த வல்லுநர்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை அலுவலர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஆதரவு குழு நடத்திய ஆய்வில், 2020ஆம் ஆண்டு ஜனவரியில் மரங்கள் அழிக்கப்பட்டதில் இருந்து குறைந்தது 100 கிலோ பாதரசம் 'பாம்பார்' சோலைக்குள் புகுந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வடகிழக்கு பருவமழை நெருங்குவதை சுட்டிக்காட்டி, பின்வருபரும் கோரிக்கைகளை நிறைவேற்றிட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடுமாறு முதலமைச்சருக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- சரணாலயத்திற்கு நீர், மண் வெளியேறுதல் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் மாசுபட்ட தூசியின் பாதிப்பைக் குறைக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை அடையாளம் காண வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
- நம்பகமான வல்லுநர்களுடன், அறிவியல் வல்லுநர் குழுவை மறுசீரமைக்க வேண்டும்.
- தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் மரங்களை வெட்டி வனவிலங்கு சரணாலயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்த யுனிலீவரை எப்படி அனுமதித்தனர் என விசாரித்து மேற்கொண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் மூடப்பட்ட பாதரச தொழிற்சாலையில் மரங்கள் வெட்டி அழிப்பு