சென்னை:இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில, “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக, மிக பின்தங்கிய நிலையிலுள்ள வன்னியர்களின் சமூக, கல்வி மேம்பாட்டிற்காக போராடிப் பெறப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.
வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று (நவ.01) தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே. முரளி சங்கர் அமர்வு, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான 7 வினாக்களுக்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை என கூறி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என தீர்ப்பளித்தனர்.
தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட இஸ்லாமியர்கள் உள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தடை விதிக்காத நிலையில், வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் இதே வாதங்களைத் தான் சமூகநீதிக்கு எதிரான சக்திகள் முன்வைத்தன.
மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி
ஆனால், அந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அந்த வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை; 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது. ஆனால், இப்போது உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் தீங்கு.
வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலனையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதனால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், பிற பாதிப்புகளுக்கும் ஆளாகியுள்ளனர்.
இத்தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவர்களின் நலன்களையும் சமூகநீதியையும் பாதுகாக்க தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வன்னியர்களுக்கான உள் இடஓதுக்கீடு எளிதாக சாத்தியமாகிவிடவில்லை.
தமிழ்நாடு வளர்ச்சிக்கு பின்னடைவு