தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆருத்ரா கோல்ட் வழக்கு: நிறுவன இயக்குநர்கள் போலீசார் முன் ஆஜராக உத்தரவு - ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம்

முதலீடு செய்த பணத்தை திரும்பக் கோரும் டெபாசிட்தாரர்களின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு முன்பு ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குநர்கள் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆருத்ரா கோல்ட் வழக்கு
ஆருத்ரா கோல்ட் வழக்கு

By

Published : Jul 19, 2022, 8:17 AM IST

சென்னை:ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் 1,678 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு மாதந்தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறிய நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் வட்டியை தராமல் மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி நிர்வாக இயக்குநர்கள் ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், வங்கி கணக்குகள் முடக்கத்தால்தான் பணத்தை திருப்பித்தர இயவில்லை என்றும், திருப்பித் தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து 5 பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதி இளந்திரையன், டெப்பாசிட் செய்தவர்களின் பணத்தை திருப்பி அளித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று (ஜூலை 18) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பு வழக்கறிஞர், 'தங்களது பணத்தை திரும்பக்கோரி விண்ணப்பித்தவர்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் காவல் துறை முன்பு ஆஜராகவில்லை' என தெரிவித்தார்.

மேலும், தங்களது பணத்தை திரும்ப அளிக்குமாறு இதுவரை 22 ஆயிரத்து 682 டெபாசிட்தாரர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், இந்த தொகையே 200 கோடி ரூபாயை தாண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. முடக்கப்பட்ட வங்கி கணக்கில் 88 கோடி ரூபாய் மட்டுமே உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதி, 'பணத்தை திரும்ப அளிக்கக்கோரி டெபாசிட்தாரர்கள் அளித்த விண்ணப்பங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வதற்காக அனைத்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள், கிளை பொறுப்பாளர்கள், முகவர்கள் ஆகியோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு தினந்தோறும் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை டெப்பாசிட்தாரர்களின் தகவல்களோடு ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்.

மேலும், மனுதாரர்கள் அனைவரும் இணைந்து வரும் ஜூலை 25ஆம் தேதிக்குள் 50 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். நிறுவனம் கூடுதலாக அளிப்பதாக கூறிய பணத்தை விட, தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெறுவதற்கு அனைத்து டெபாசிட்தாரர்களும் உரியவர்கள் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:‘நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டது’ - சிவாஜி மகள்கள் வாதம்

ABOUT THE AUTHOR

...view details