தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்யும் புதிய சட்டம் விரைவில்...!'

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடைசெய்யும் புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் எனத் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 4, 2021, 12:11 PM IST

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடைசெய்ய வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடைவிதித்து அவசர கதியில் சட்டம் ஒன்றை அதிமுக அரசு நிறைவேற்றியது.

அதிமுக அரசின் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டு, உரிய கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துவைத்த போதிலும், “இந்த விளையாட்டுகள் ஏன் தடைசெய்யப்படுகிறது என்பது குறித்து போதுமான காரணங்களைச் சட்டம் நிறைவேற்றும்போது கூறவில்லை; விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடைவிதிக்க முடியாது” என்று கூறி தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி விளையாட்டினைத் தடைசெய்யும் சட்டத்தை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனாலும், உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டுவருவதற்குத் தடை ஏதுமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இதே தீர்ப்பில் தெளிவுப்படுத்தியிருக்கிறது.

பொதுநலன் மிக முக்கியம் என்பதால் உரிய விதிமுறைகள், தகுந்த காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு எவ்வித தாமதமுமின்றி ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடைசெய்யும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என முதலமைச்சர் நேற்றைய தினம் தீர்ப்பு வெளிவந்த உடனேயே உத்தரவிட்டிருக்கிறார்.

ஆகவே, முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடைசெய்யும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்"எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து - உயர் நீதிமன்றம் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details