தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2021, 4:07 PM IST

ETV Bharat / city

கால்வாயில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

சென்னை கன்னிகாபுரம் அருகே பக்கிங்காம் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற முதியவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

கால்வாயில் சிக்கி முதியவர் உயிரிழப்பு
கால்வாயில் சிக்கி முதியவர் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகரைச் சேர்ந்தவர் முத்து (50). மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். அப்பகுதியில் கால்வாய் அடைப்பு போன்ற வேலைகளையும் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் (நவ.04) இவரது வீட்டின் அருகிலுள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் ஏராளமான பிளாஸ்டிக் கேன்கள் தேங்கி கிடந்தன. தீபாவளி என்ற காரணத்தினால் பொதுமக்களை கேட்டுக் கொண்டதற்கிணங்க அதை அப்புறப்படுத்துவதற்காக இறங்கினார்.

அப்போது கால்வாயில் விழுந்து சேற்றில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர் முத்துவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு பத்தரை மணி வரை தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று (நவ.03) காலை முத்துவின் உடல் கால்வாயில் மிதந்தது.

பின்னர் தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் முத்துவின் மகன் திருநங்கையாக மாறிய அழகி என்பவர், கால்வாய் விவகாரம் தொடர்பாக மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.

இறந்தவரின் மகன் கோரிக்கை

இந்த கால்வாய் பிரச்னையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்காக அந்தக் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற தனது தந்தை இறந்து விட்டதாகவும், மீண்டும் ஒருவர் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கணவரை இழந்து தவிக்கும் தனது தாயாருக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:சிசிடிவி பதிவு: நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய வாகனம் - தந்தை, மகன் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details