தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கணவன் செய்யும் வேலையோ தரகு மோசடி.. மனைவியால் தவிர்க்கப்பட்டதோ செமத்தியான அடி!

குத்தகைக்கு வீடு வாங்கி தருவதாக பணமோசடியில் ஈடுபட்டு வந்தவரை கடத்திச் சென்ற கும்பலிடம் இருந்து ஒரு மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டு கடத்தலில் ஈடுபட்ட 6பேரை சிறையில் அடைத்தனர்.

By

Published : Mar 26, 2022, 6:34 PM IST

கைது
கைது

சென்னை: விருகம்பாக்கம் கங்கை அம்மன் கோயில் அருகே கும்பல் ஒன்று ஒருநபரைத் தாக்கி காரில் கடத்தி செல்வதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (மார்ச் 25) நேற்றிரவு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலின் பேரில் அனைத்து காவல் நிலைய காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சோதனை சாவடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, அம்பத்தூர் சூரப்பேட்டை அருகே சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் வந்த காரை வழிமறித்து காவல்துறை சோதனை செய்தனர். சோதனையில் கடத்தப்பட்டு வருவது தெரியவந்ததையடுத்து அவரை மீட்டு, கடத்திய 6 பேரையும் காவல்துறையினர் பிடித்தனர்.

ஆள் கடத்தல்: கடத்தப்பட்ட நபர் தி.நகரைச் சேர்ந்த துணி வியாபாரம் மற்றும் வீடு தரகு வேலைப்பார்த்து வந்த ரவி (52) என்பது தெரியவந்தது. மேலும் நேற்று பூக்கடையில் துணி வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்பியபோது, விருகம்பாக்கத்தில் ஒரு கும்பல் தன்னை வழிமறித்து கடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பிடிபட்ட 6 நபர்களிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், அவர்கள் அயனாவரத்தைச் சேர்ந்த அஜய்குமார் (23), வழக்கறிஞர் சுனில் (26), கோபி நாத் (27), சாம்சன் (27), திலீப் (27), நஸ்ரூதின் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.

பணமோசடியே காரணம்:மேலும் இது தொடர்பான விசாரணையில், நஸ்ரூதின் மற்றும் அஷ்ரப் ஆகியோர் குத்தகைக்கு வீடு தேடி வந்தபோது, வீடு தரகரான ரவி குத்தகைக்கு வீடுள்ளதாகக் கூறி, ரூ.5லட்சம் மற்றும் 8 லட்சம் முறையே பெற்றுக் கொண்டு தமிழ்நாடு தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான இடம் ஒன்றை காண்பித்து ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தனர்.

ஆள்கடத்தல் வழக்கில் கைதானவர்கள்

பின்னர் பணத்தை திரும்பித் தரம்படி கேட்டதற்கு, மறுத்துவிடவே, வழக்கறிஞர் சுனிலிடம் இது பற்றி கூறியுள்ளனர். பின் வழக்கறிஞர் அவரது நண்பர்களுடன் இணைந்து அவரைக் கடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காவல்துறை நடவடிக்கை: கடத்தப்பட்ட ரவி, ஏற்கனவே இதேபோல வண்ணாரப்பேட்டை, அயனாவரம், புளியந்தோப்பு உள்ளிட்ட பல இடங்களில் இது போன்று வீடு குத்தகைக்கு உள்ளதாக பலரிடமும் பணத்தைப் பெற்று ஏமாற்றி மோசடி செய்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், கணவரை கடத்தியதாக ரவியின் மனைவி விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் இது தொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து பின், நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: திருநின்றவூரில் பெண்ணிடம் தகராறு.. தட்டி கேட்ட எஸ்ஐ தலையில் வெட்டிய இளைஞர்கள்!

ABOUT THE AUTHOR

...view details