தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 12, 2021, 6:50 AM IST

ETV Bharat / city

பள்ளிகள் திறப்பு எதிரொலி: சென்னையில் 4 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு!

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

மாணவர்களுக்கு கரோனா, கரோனா, corona for students, corona
4 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு

சென்னை:கரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து இருந்துவரும் சூழலில், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில், பள்ளிகள் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரு வாரம் மூடல்

அதில், கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 104 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், வேறு யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்டது.

இருப்பினும் அந்தப் பள்ளியை ஒரு வாரத்துக்கு திறக்க வேண்டாம் என அலுவலர்கள் அறிவுறுத்தினர். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 8ஆம் தேதி சென்னை, பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

2 நாள்களில் மூவர் பாதிப்பு

அந்த மாணவரின் குடும்பத்தினர் உள்பட வகுப்பில் பயின்ற மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், மற்றவர்களுக்கு தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அன்றைய தினமே அயனாவரம் மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவருடன் தொடர்பில் இருந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை என உறுதியானது. தற்போது, அந்த மாணவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதேபோல், சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கடந்த 9ம் தேதி கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த வாரத்தில் மட்டும் சென்னையில் நான்கு பள்ளி மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நோய் தொற்று காலம் இது - பண்டிகை நாட்களில் உங்கள் கைவசம் இருக்கவேண்டியவை என்ன?

ABOUT THE AUTHOR

...view details