சென்னை: சென்னையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒட்டி அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் சதுரங்கப்போட்டி குறித்து விழிப்புணர்வும், ஆர்வத்தையும் ஏற்படுத்த பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப்போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெறும் மாணவர்கள் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். இத்திட்டம் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் மாநில அளவிலான சதுரங்கப்போட்டியில் பங்கேற்று விளையாடி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைக் காணவும், சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாடவும் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகள் 1 - 5 வகுப்புகள், 6 - 8 வகுப்புகள், 9 -10 வகுப்புகள், 11 - 12 வகுப்புகள் என 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன.
இதையடுத்து இந்த சதுரங்கப்போட்டியில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வெற்றிபெற்ற 152 மாணவர்கள் இன்று(ஜூலை 27) பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை விமானநிலையம் அழைத்துவரப்பட்டு, சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து பெங்களூரு அழைத்துச்செல்லப்பட்டனர். இந்த விமானம் மாலை 4.30 மணியளவில் மீண்டும் சென்னை விமானநிலையத்திற்கு வந்து சேரும்.